search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்த காட்சி
    X
    டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்த காட்சி

    கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் - கலெக்டர் ரத்னா எச்சரிக்கை

    தனியார் இடங்களில் கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து நகராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களுடன் வீடு, வீடாகச் சென்று வீடுகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஏடிஎஸ் கொசு நல்ல நீரில் உற்பத்தியாவதால் அனைத்து கிராம மற்றும் நகர்புற இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க டெங்கு காய்ச்சல் உற்பத்தியாகும் மூலங்களான தெளிந்த நீர்த்தேக்க தொட்டிகள், பயன் பாடற்ற பானைகள், உரல்கள், பழைய டயர், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அரசுத்துறை அலுவலர்கள் தலைமையில் ஒவ்வொரு வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனியார் இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த ஊராட்சி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை சுத்தமாகவும், மழைநீர் தேங்கா வண்ணமும் வைத்திருக்க வேண்டும்.

    அரசு பணியாளர்களும் தங்கள் மேற்பார்வையில் உள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்து ஏடிஎஸ் கொசுக்கள் வராத வண்ணம் கண்காணிக்க வேண்டும். இன்று (அதாவது நேற்று) அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட அழகப்பா நகர், முதல் தெருவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை, வீடுவீடாகவும், திறந்தவெளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபத்திக்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள், இளைஞர் நற்பணி மன்றங்கள், நேரு யுவ கேந்திரா போன்ற அமைப்புகள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளருடன் தொடர்பு கொண்டு சேவை செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, அரியலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பூங்கோதை, நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, வட்டாட்சியர் கதிரவன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×