search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த வேலையும் செய்யலாம், அவமானம் இல்லை- என்ஜினீயரிங் பட்டதாரியின் வியாபாரம் என்ன தெரியுமா?
    X

    எந்த வேலையும் செய்யலாம், அவமானம் இல்லை- என்ஜினீயரிங் பட்டதாரியின் வியாபாரம் என்ன தெரியுமா?

    படித்துவிட்டு சும்மா இருக்கக்கூடாது, எந்த வேலையும் செய்யலாம், அவமானம் இல்லை என்று கரூரில் சொந்த காலில் நிற்கும் என்ஜினீயரிங் பட்டதாரி குறித்து பார்ப்போம்...
    கரூர்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சுந்தர் (வயது 28). 2011-ம் ஆண்டு பி.டெக். என்ஜினீயரிங்கில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகே‌ஷன் படிப்பை முடித்தார்.

    பட்டதாரியான அவர் வேலை தேடி பல நிறுவனங்களுக்கு நடையாய் நடந்தார். வழக்கம் போல சொந்த ஊரில் வேலை கிடைக்காததால் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலில் ரூ.8 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அதில் ஜெய்சுந்தரால் நீடிக்க முடியவில்லை. பிறகு கோவை சென்று ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.

    ஆனாலும் குறைந்த சம்பளமே கிடைத்ததால் சுவற்றில் அடித்த பந்து போல் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார். கரூரில் உள்ள டி.என்.பி.எல். நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு மாதம் ரூ.13 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.

    ஆனாலும் 6 மாதமே அங்கு வேலை செய்ய முடிந்தது. இதனால் மீண்டும் மனமுடைந்த ஜெய்சுந்தர் சொந்த ஊரில், சொந்த காலில் நின்று வென்று காட்டுகிறேன் என சபதம் ஏற்றார். என்ன தொழில் செய்யலாம் என நீண்ட நேரம் யோசித்த ஜெய்சுந்தருக்கு பசியை போக்கும் தொழிலே பிரதானமாக தெரிந்தது.

    கரூரில் கோவை ரோட் டில் ஜூஸ் கடை நடத்தி வரும் நண்பர் மதுவின் ஞாபகம் வந்தது. உடனே கரூரில் அதிகம் விற்கும் கருவூர்காரம் எனப்படும் தட்டு வடை, எள்ளு வடை, பூண்டு வடை ஆகியவற்றை விற்கும் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என நண்பன் மது ஆலோசனை கொடுத்தார்.

    மற்றொரு நண்பன் கோபியும் துணை நின்றார். இதை தொடர்ந்து ஜெய்சுந்தர் வேலாயுதம்பாளையத்தில் உடனே கடையை தொடங்கினார்.

    அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அடிக்கடி பொருட்கள் வாங்க கரூருக்கு சென்று வர வேண்டி இருந்ததால் அலைச்சல், செலவு என ஜெய்சுந்தருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதற்கும் நண்பன் மது கைகொடுத்தார். கரூரில் தொழில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று அறிவுறுத்தினார்.



    ஆனால் கடைக்கு வாடகை, அட்வான்ஸ் என அதற்கே ஒரு பெரும் தொகை ஆகும் என்பதால் தன்னிடம் போதுமான பணம் இல்லையே என்று வருந்தினார். மற்றொரு நண்பரான கோபி, தனது ஜூஸ் கடைக்கு அருகிலேயே தள்ளு வண்டியில் பொருட்களை வைத்து விற்க உதவினார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கருவூர் காரம் ஸ்டால் என்ற பெயருடன் தள்ளு வண்டியில் தட்டுவடை, எள்ளுவடை, பூண்டு வடை என கரூரில் மிகவும் பிரசித்தமான நொறுக்கு தீணிகளை விற்று வரும் ஜெய்சுந்தர் இதன் மூலம் தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை லாபம் சம்பாதிக்கிறார்.

    மாதம் ரூ.18 ஆயிரம் வரை ஜெய்சுந்தருக்கு வருவாய் கிடைக்கிறது. தந்தை இல்லாத நிலையில் ஒரே மகனான ஜெய்சுந்தர் என்ஜினீயரிங் படித்து விட்டு தள்ளுவண்டி வியாபாரம் செய்கிறானே என்று தாய் சித்ரா முதலில் மனம் கலங்கினாலும் நாளடைவில் சொந்த காலில் நின்று சாதித்த ஜெய்சுந்தரின் மன உறுதியை கண்டு சித்ரா மனதை சமாதானம் செய்து கொண்டார்.


    தினமும் காலையில் எழுந்து தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு செல்லும் ஜெய்சுந்தர் இரவு வரை வியாபாரம் பார்த்து விட்டு சம்பாதித்த பணத்துடன் வீடு திரும்புகிறார். அவ்வப்போது தனது பட்டய படிப்பு சான்றிதழையும், பட்டம் வாங்கிய போது எடுத்த புகைப்படத்தையும் பார்த்து ஜெய்சுந்தர் மனம் கலங்கினாலும் சொந்த காலில் நிற்கிறோம் என்று தேற்றிக்கொள்கிறார்.

    இன்று தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்கிறோம். நாளை மிக பெரிய நிறுவனத்திற்கு நாமும் சொந்தக்காரராவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை தள்ளுகிறார் ஜெய்சுந்தர்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, தனியார் நிறுவனங்களில் பல இடங்களில் வேலை பார்த்துவிட்டேன் குறைந்த சம்பளத்தில் ‘ஒய்ட் காலர் ஜாப் ’ என்ற பெயரில் வார்த்தையால் வறுத்தெடுக்கிறார்கள். அங்கு வேலை பார்த்தால் பார்த்த நபர்களையே ஒரே அறைக்குள் பார்த்து கொண்டிருக்க வேண்டும்.

    இப்போது எனது கடைக்கு பலதரப்பட்ட மக்கள் வருகிறார்கள். காரத்தை சாப்பிட்டு விட்டு ருசியால் கவரப்பட்டு என்னை பற்றி விசாரிக்கிறார்கள். நான் படித்த படிப்பை கேட்ட பிறகு எனது முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். படித்துவிட்டு சும்மா இருக்கக்கூடாது, எந்த வேலையும் செய்யலாம், அவமானம் இல்லை.

    அடுத்து எனது படிப்பு தகுதியை வைத்து வங்கியில் கடன் பெற்று தொழிலை விரிவுப்படுத்த போகிறேன் என தன்னம்பிக்கையோடு பேசும் ஜெய்சுந்தரின் கண்களில் நானும் வரும் காலத்தில் அதானி, அம்பானி ஆவோம் என்ற நம்பிக்கை தெரிகிறது.

    ஒவ்வொரு நாளும் தள்ளுவண்டியை தள்ளும் போதெல்லாம் ஒளிமயமான எதிர்காலம் ஜெய்சுந்தரின் உள்ளத்தில் தெரிகிறது. அவரது முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
    Next Story
    ×