search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
    X

    சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

    சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் முதல் விழுப்புரம் வரை நடைபெற்றது.
    சென்னை:

    சென்னை - மதுரை இடையே அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த ரெயிலை வருகிற 27-ந்தேதி மதுரை வரும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சென்ட்ரலில் இருந்து எழும்பூர், தாம்பரம் வழியாக விழுப்புரம் வரை இயக்கப்பட்டது. 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    சோதனை ஓட்டத்தின்போது பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா? அதிர்வு இல்லாமல் ரெயில் ஓடுகிறதா? என்பது போன்ற அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ‘தேஜஸ்’ ரெயில் அதிவேக ரெயில் மட்டுமல்ல. அதி நவீன வசதிகளையும் கொண்டது. இருக்கை வசதி கொண்ட 18 ஏ.சி. பெட்டிகள் உள்ளன. ஒரு பெட்டியில் 78 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். 2 உயர் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு பெட்டியிலும் 56 இருக்கைகள் உள்ளன.

    சர்வதேச தரத்தில் எம்.ஆர்.பி. தகடுகளால் உட்புறம் அழகிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கையின் பின்புறத்திலும் விமான இருக்கைகளில் உள்ளது போல் சிறிய வீடியோ திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணத்தின்போது பாடல்கள், வீடியோக்கள் பார்க்கலாம். ஜி.பி.எஸ். வசதி, எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட சொகுசான வசதிகள் அனைத்தும் உள்ளன.

    இந்த ரெயில் பயணம் விமான பயணத்தைபோல் சொகுசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×