search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதுவை பா.ஜனதா நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி பேசிய காட்சி.
    X
    வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதுவை பா.ஜனதா நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி பேசிய காட்சி.

    ‘நடுத்தர மக்களுக்கு என்ன செய்தீர்கள்’ - பிரதமர் மோடியிடம் தொண்டர் கேட்ட கேள்வியால் பரபரப்பு

    புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் கட்சி தொண்டர் ஒருவர் ஆட்சியை விமர்சனம் செய்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PMModi #BJP
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    புதுவை செண்பகா ஓட்டலில் நடந்த வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடலில் மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கட்சியினரிடையே பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் பேசியதாவது:-

    ‘பூத்’ அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். தொடர்ந்து மக்களை சந்தியுங்கள். கடந்த முறையை விட கூடுதல் இடங்களை பெற பாடுபடுங்கள். அரசின் திட்டங்களை மக்களிடம் சொல்லுங்கள்.

    கடின உழைப்பை உயர்த்துங்கள், வாக்கு எண்ணிக்கையை உயர்த்துங்கள், அனைவரும் ‘நமோ’ ஆப் தரவிறக்கம் செய்து ரூ.5 நன்கொடை அளியுங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



    தொடர்ந்து பிரதமர் மோடியிடம் கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்தார். புதுவை பூரணாங்குப்பத்தை சேர்ந்த விமலாதேவி, “நான் முத்ரா திட்டத்தில் வங்கியில் 1.5 லட்சம் கடன் பெற்று தலையணை தயாரித்து விற்கிறேன். 4 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளேன்” என்றார்.

    அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “உங்கள் தொழில் வளர வாழ்த்துகிறேன். நீங்கள் தயாரிக்கும் தலையணையை எனக்கு அனுப்புங்கள். நான் பயன்படுத்துகிறேன்” என்றார்.

    இதனையடுத்து நிர்மல் குமார் ஜெயின் என்பவர், நடுத்தர வர்க்க மக்களிடம் வரியை மட்டுமே வசூலிப்பதில் குறியாக உள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு என்ன செய்தீர்கள்? அவர்கள் நிம்மதியாக இருக்க நடவடிக்கை எடுங்கள் என்றார்.

    இதனால் பிரதமர் மோடியின் முகம் இறுகியது. தொடர்ந்து அவர் பதில் அளிக்கும்போது, நீங்கள் வியாபாரி. வர்த்தக ரீதியாக பேசுகிறீர்கள். நடுத்தர மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றார்.

    இதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடல் முடிவடைந்தது என்பதை குறிக்கும் வகையில் ‘வணக்கம் புதுச்சேரி’ என முடித்துக் கொண்டார்.

    கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் கட்சி தொண்டர் ஒருவர் ஆட்சியை விமர்சனம் செய்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PMModi #BJP


    Next Story
    ×