search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் மீன் வியாபாரி வெட்டி கொலை - அண்ணனை தாக்கியவரை பழி வாங்கிய ரவுடி கும்பல்
    X

    சேலத்தில் மீன் வியாபாரி வெட்டி கொலை - அண்ணனை தாக்கியவரை பழி வாங்கிய ரவுடி கும்பல்

    சேலத்தில் மீன் வியாபாரி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
    சேலம்:

    சேலம் பெரியபுதூர் எம்.டி.எஸ். நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). பிரபல ரவுடியான இவர் அஸ்தம்பட்டி சாரதா கல்லூரி சாலையில் உள்ள சுற்றுலா மாளிகை எதிரே மீன் விற்பனை கடை நடத்தி வந்தார். வெங்கடேசன் நேற்றிரவு வழக்கம் போல மீன்களை வறுத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வெங்கடேசன் கடைக்கு வந்தது. பின்னர் வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த கும்பல் எங்களை விட நீ பெரிய ரவுடியாடா? என்று கூறியபடி ஆவேசமாக கத்தினர்.

    பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் 5 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்பட ஆயுதங்களால் வெங்கடேசனின் கழுத்து, முகம், வயிறு, கை உள்பட பல்வேறு பகுதிகளிலும் சரமாரியாக வெட்டினர்.

    இதில் முகம் மற்றும் குடல் சிதைந்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் துடி துடித்து இறந்தார். இதை பார்த்த அங்கு மீன் வாங்க வந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே அந்த கொலை கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியது.

    தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுப்புலெட்சுமி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பின்னர் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே அங்கு வந்த வெங்கடேசனின் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று வெங்கடேசனின் உடலை பார்த்து கதறினர். இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் மீது அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு துரைசாமி என்பவரை கொலை செய்த வழக்கும், சூரமங்கலம், அழகாபுரம் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் என மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சூரமங்கலம் வழக்கில் குண்டாசிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியில் வந்தவர்.

    மேலும் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (29), அவரது தம்பி அஜித் (27) மற்றும் ராம் (35) ஆகியோருடன் யார் பெரிய ரவுடி என்பது தொடர்பாக வெங்கடேசனுக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    இதற்கிடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு ரஞ்சித்தை, வெங்கடேசன் சரமாரியாக தாக்கினார். இது குறித்து ரஞ்சித் சேலம் மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த தனது தம்பி அஜித்திடம் கூறி கதறி அழுதார். அப்போது அவரை சமாதானப்படுத்திய அஜித் நான் வெளியில் வந்ததும் பார்த்துக்கொள்கிறேன், அது வரை பொறுமையாக இரு என்று கூறி அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் தண்டனை காலம் முடிந்து கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்த அஜித், வெங்கடேசனிடம் இது குறித்து கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. உடனே அஜித் நீ பெரிய ரவுடியா? என்றைக்கு ஆனாலும் நாங்கள் தான் உன்னை கொல்வோம் என்று சபதமிட்டு சென்றார். இதனை பொருட்படுத்தாத வெங்கடேசன் வழக்கம் போல மீன் வியாபாரத்தை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்ட அஜித் அவரது சகோதரர் ரஞ்சித் தலைமையிலான கும்பல் நேற்று அவரை மீன் கடையில் வைத்தே அவரை கொலை செய்ய திட்டமிட்டது.

    அதன்படி அஜித், ரஞ்சித், ராம் மற்றும் 2 பேர் என மொத்தம் 5 பேர் கடைக்கு சென்றனர். அப்போது கடையில் இருந்த வெங்கடேசனை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியதும் தெரிய வந்தது.

    அஸ்தம்பட்டி போலீசார் அஜித், ரஞ்சித் மற்றும் ராமின் உறவினர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையாளிகள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கொலை செய்யப்பட்ட வெங்கடேசனுக்கு மேகலா (32) என்ற மனைவியும், சபரி (5) என்ற மகனும்,, காயத்ரி (3) என்ற மகளும் உள்ளனர்.
    Next Story
    ×