search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொய் வழக்கு பதிவு செய்ததாக புகார் - பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
    X

    பொய் வழக்கு பதிவு செய்ததாக புகார் - பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

    அதிகாரத்தை மீறி செயல்பட்ட தமிழக பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுவை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அரும்பார்த்த புரத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினீயர் செங்குட்டுவன் (வயது 45). இவரது மனைவி பாரதி (42). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    பாரதியின் சொந்த ஊர் சீர்காழி அருகே உள்ள திருவேற்காடு ஆகும். அவர், மயிலாடுதுறை போலீசில் தனது கணவர் குடும்பத்தினர் தன்னை துன்புறுத்துவதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சுகுணா புதுவை வந்து செங்குட்டுவனின் அண்ணன் பாரி மற்றும் செங்குட்டுவனின் பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது அவர்களை கடுமையாக தாக்கியதாகவும், தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவும் புகார் கூறப்பட்டது.

    மேலும் பாரியை மயிலாடுதுறைக்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவமதிப்பு செயலில் ஈடுபட்டதாகவும், காயங்கள் ஏற்படும் வகையில் தாக்கியதாகவும் கூறப்பட்டது.

    இது சம்பந்தமாக பாரி புதுவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், சம்பந்தமே இல்லாத போலீஸ் நிலைய அதிகாரி தவறான புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்.

    அவருடைய போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்ததாக புகார் கூறப்படாத பட்சத்தில் விதிமுறைகளை மீறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த போலீஸ் அதிகாரி மீதும், பொய் புகார் கொடுத்த பாரதி மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரி தனது புகாரில் கூறி இருந்தார்.

    இதை விசாரித்த ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ரெட்டியார்பாளையம் போலீசார் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, செங்குட்டுவன் மனைவி பாரதி ஆகியோர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பொய் புகார் கொடுத்தல், பொய் வழக்கு பதிவு செய்தல், விதிமுறைகளை மீறி அதிகாரத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×