search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு  - சென்னை மண்டலத்தில் 97.37 சதவீதம் பேர் தேர்ச்சி
    X

    சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு - சென்னை மண்டலத்தில் 97.37 சதவீதம் பேர் தேர்ச்சி

    சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்புதேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் 97.37 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    சென்னை:

    மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வை கடந்த மார்ச் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை நடத்தியது. இத்தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 24 ஆயிரத்து 682 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வு முடிவுகள் www.results.nic.in , www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டது.

    சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு தேர்வில் டெல்லி அருகேயுள்ள குர்கான் பள்ளி மாணவர் பிரகார் மிட்டல் 500-க்கு 499 மதிப்பெண் எடுத்து முதல் இடம் பெற்றுள்ளார். 499 மதிப்பெண் எடுத்து உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் ஆர்.பி. பப்ளிக் பள்ளியை சேர்ந்த மாணவர் ரிம்ஷிம் அகர்வால் 2-வது இடத்தை பிடித்தார். 499 மதிப்பெண் பெற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாமிலி சர்வதேசபள்ளி மாணவி நந்தினி கார்க் 3-வது இடத்தில் உள்ளார். 499 மதிப்பெண் எடுத்து 4-வது இடத்தை கேரளா மாநிலம் கொச்சி பவான்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்ரீலட்சுமி பெற்றார்.

    முதல் இடம் பெற்றவர் முதல் 4-வது இடம் பெற்றவர் வரை 500-க்கு 499 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதில் சீனியாரிட்டி என்ற அடிப்படையில் அவர்களுக்கு தரவரிசை கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்திய அளவில் மொத்தம் 14 லட்சத்து 8 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 86.70 சதவீத தேர்ச்சி ஆகும்.

    திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, அந்தமான்-நிகோபார் தீவுகள், டையூ -டாமன் ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 97.37 சதவீதம் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. அஜ்மீர் மண்டலம் 91.86 சதவீதம் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியை சேர்ந்த மாணவர் தரணி கோவிந்தசாமி 500-க்கு 497 மதிப்பெண் பெற்று அந்த பள்ளியில் முதல் இடம் பெற்றார்.

    தரணி கோவிந்தசாமி, கிஷோர் ஞானேஸ்வரன்

    அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவி ரித்து அலிஸ் செரியன் 500-க்கு 493 மதிப்பெண்ணும், மாணவர் பிரசாந்த் 492 மதிப்பெண்ணும் எடுத்து உள்ளனர் என்று பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி தெரிவித்தார். அவர்கள் உள்பட தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தார்.

    மேலும் அவர் கூறுகையில் எங்கள் பள்ளியில் முதல் மாணவி ரித்து எனது பள்ளி ஆசிரியை அனிதாவின் மகள் ஆவார் என்றும் தெரிவித்தார். இந்த பள்ளியில் 778 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 19 பேரும், கணிதத்தில் 8 பேரும், பிரெஞ்சு பாடத்தில் 5 பேரும், அறிவியல் பாடத்தில் 3 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் கே.மோகனா, தங்களது பள்ளியில் கிஷோர் ஞானேஸ்வரன் என்ற மாணவர் 500-க்கு 492 மதிப்பெண் எடுத்து உள்ளதாக தெரிவித்தார்.
    Next Story
    ×