search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர்
    X

    புதுவையில் மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர்

    தகராறில் மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் லாஸ்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் செண்பக ராமன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). ஆசாரி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (47).

    இவர்களுக்கு மகாலட்சுமி, தமிழ்செல்வி என்ற மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனி இடங்களில் வசித்து வருகிறார்கள்.

    ஆறுமுகம்- சரஸ்வதி மட்டும் இந்த வீட்டில் வசித்து வந்தனர். சமீப காலமாக ஆறுமுகம் வேலைக்கு செல்வதில்லை. சரஸ்வதி லாஸ்பேட்டையில் உள்ள கல்வித்துறை சமையல் கூடத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் வீட்டு வேலைகளுக்கும் சென்று வருவார்.

    ஆறுமுகம் வேலைக்கு செல்லாத அதே நேரத்தில் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

    நேற்று இரவு கணவன் - மனைவி இருவரும் வீட்டில் தூங்கினார்கள். நள்ளிரவு நேரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் உருட்டுக்கட்டையால் மனைவி சரஸ்வதியை கடுமையாக தாக்கினார்.

    தலையின் பின்பக்கம் சரமாரியாக அடி விழுந்தது. இதில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடத்திலேயே மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிர் இழந்தார்.

    மனைவி இறந்து விட்டதை அறிந்த ஆறுமுகம் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இந்த கொலை நடந்தது யாருக்கும் தெரியாது.

    இன்று காலை சரஸ்வதியின் மகள் தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சரஸ்வதி பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் ஆகியோர் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தலைமறைவாகி விட்ட ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் லாஸ்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×