search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றப்படும்: நாராயணசாமி அறிவிப்பு
    X

    டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றப்படும்: நாராயணசாமி அறிவிப்பு

    புதுவையில் டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவ துறை சார்பில் தற்போதைய மருத்துவவியல் சட்டம் மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் இன்று நடந்தது. கருத்தரங்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    டாக்டர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தரமான டாக்டர்களாக வர வேண்டும்.

    அதுபோல் நர்சிங் மாணவிகளுக்கும் சிறந்ததொரு பயிற்சி அளிக்க வேண்டும். இந்த மருத்துவ கல்லூரிக்கும், ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கும் 1½ கிலோ மீட்டர் தூரம் கூட இல்லை.

    சமீபத்தில் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் தமிழகத்தில் இருந்து சிகிச்சை பெற வந்ததாக கூறினார்கள். ஜிப்மருக்கு தினமும் வெளிநோயாளிகள் 7 ஆயிரம் பேர் வருகிறார்கள்.

    அதேபோல் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 3 ஆயிரம் பேர் சிகிச்சை பெற வருகிறார்கள்.

    புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள்.

    இதன்படி பார்த்தால் மற்ற மாநிலங்களை விட புதுவையில் தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுவது தெரிகிறது. இதெல்லாம் நமக்கு பெருமையாகும்.

    புதுவையில் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையம் ஜிப்மரிலும், கதிர் காமத்திலும் 2 இடங்களில் மட்டுமே இருக்கிறது. தற்போது காரைக்கால் மக்கள் தரமான சிகிச்சை பெறுவதற்காக அங்கு மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஒரு முயற்சி எடுத்துள்ளார். கிராமப்புறங்களில் காலையில் ஒரு ஷிப்டாக வும், மாலையில் ஒரு ஷிப்டாகவும் என டாக்டர்கள் பணிபுரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    புதுவையில் கல்விக்கு அடுத்தபடியாக சுகா தாரத்துக்கு அதிக செலவு செய்யப்படுகிறது. புதுவை மக்கள் 30 சதவீதம் சிகிச்சை பெற்றால் தமிழக பகுதி மக்கள் 60 சதவீதம் பேர் சிகிச்சை பெற புதுவைக்கு வருகிறார்கள்.

    புதுவைக்கு கூடுதலாக ரூ.500 கோடி வழங்க நான் 5 முறை டெல்லி சென்று வலியுறுத்தினேன். மத்திய அரசும் இந்த நிதியை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

    டாக்டர்கள் பொதுவாக அதிகமாகவே சம்பளம் பெறுகிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம். எனவே, பணத்துக்கு ஆசைப்பட்டு டாக்டர்கள் தவறான வழிகளில் செல்லக்கூடாது.எனவே, அவர்கள் வெளியூர்- உள்ளூர் நோயாளிகள் என பார்க்காமல் அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்.

    அதுபோல் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும்போது சில நோயாளிகள் இறந்து விடுகிறார்கள். இதனை பயன்படுத்தி நோயாளிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிடுவது, பொருட்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒருசில நேரங்களில் டாக்டர்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதனை தடுக்க சட்டம் இயற்றப்படும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

    டாக்டர்கள் தகுந்த சிகிச்சை அளிக்கும் போது ஒரு சில நேரங்களில் நோயாளிகள் இறந்து விடுவது துருதிருஷ்டமானது. டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்யும்போது சில நேரங்களில் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

    அதற்கேற்றவாறு டாக்டர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு இதுபோன்ற சட்டம் மேம்படுத்துதல் கருத்தரங்கம் உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் நலவழித் துறை செயலாளர் பாபு, இயக்குனர் டாக்டர் ராமன், மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ், டீன் சிவஞானம் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சட்டம் சார்ந்த மருத்துவதுறை தலைவர் டாக்டர் பெரிமிங்ஸ்டன் மாராக்கு நன்றி கூறினார்.

    Next Story
    ×