search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாப்பாடு ருசியாக செய்யாததால் மனைவி கழுத்தை அறுத்து கொன்று கணவர் தற்கொலை
    X

    சாப்பாடு ருசியாக செய்யாததால் மனைவி கழுத்தை அறுத்து கொன்று கணவர் தற்கொலை

    சாப்பாடு ருசியாக செய்யாததால் மனைவி கழுத்தை அறுத்து கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் கங்கையம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). நிலக்கிழாரான இவருக்கு முந்திரி தோட்டம் உள்ளிட்ட பல ஏக்கர் நிலம் உள்ளது. இவரது மனைவி புஷ்பவள்ளி (75). இவர்களுக்கு 2 மகன்களும், 7 மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகன் சமீபத்தில் இறந்து விட்டார். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    ஆறுமுகம் தனது மனைவி புஷ்பவள்ளியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து ருசியாக சமையல் செய்யவில்லை என்று மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதுபோல் நேற்று இரவும் ஆறுமுகம் மதுகுடித்துவிட்டு ருசியாக குழம்பு செய்யவில்லை என்று புஷ்பவள்ளியிடம் கேட்டுள்ளார்.

    இதில் கணவன்-மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் வீட்டில் வைத்திருந்த மரம் வெட்டும் பெரிய கொடுவா கத்தியை எடுத்து வந்து புஷ்பவள்ளியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் புஷ்பவள்ளி துடிதுடித்து இறந்து போனார்.

    ஆத்திரத்தில் மனைவியை வெட்டி கொன்று விட்டோமே என்று மனம் வருந்திய நிலையில் ஆறுமுகம் தான் உடுத்தியிருந்த வேட்டியால் வீட்டின் உத்திரத்தில் உள்ள பேன் கொக்கியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வழக்கமாக 6 மணிக்கெல்லாம் வீட்டின் வாசலை பெருக்கி சுத்தம் செய்யும் புஷ்பவள்ளி இன்று காலை 7.30 மணி வரை வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது புஷ்பவள்ளி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், ஆறுமுகம் தூக்கில் தொங்குவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் லாஸ்பேட்டை போலீசாருக்கும் மற்றும் அருகில் குடியிருக்கும் மகன் மற்றும் மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×