search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்ததில் நியாயம் இல்லை: இளங்கோவன் பேட்டி
    X

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்ததில் நியாயம் இல்லை: இளங்கோவன் பேட்டி

    தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் சஸ்பெண்டு செய்யப்பட்டது ஜனநாயக நெறி முறைகளுக்கு எதிரானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்
    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் சஸ்பெண்டு செய்யப்பட்டது ஜனநாயக நெறி முறைகளுக்கு எதிரானது.

    எதிர்க்கட்சி தலைவர் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்ததில் எந்த நியாயமும் இல்லை.

    மக்கள் மீண்டும் ஜெயலலிதாவுக்கு ஆட்சி அமைக்கும் பொறுப்பை வழங்கினார்கள். ஆனால் அவரோ முன்பு போலவே செயல்படுகிறார்.

    மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை பிரதமரிடமும் அதிகாரிகளிடமும் எடுத்துக் கூற வேண்டும்.

    தமிழக காங்கிரசுக்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார். காலதாமதத்தை பற்றி பிரச்சினை இல்லை. ஏனென்றால் இருப்பவர்கள் எல்லோரும் தலைவர்கள்தான். நான் ராஜினாமா செய்ததால் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இல்லை.

    உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடரும். பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும்.

    த.மா.கா. காங்கிரசில் இணையப் போகிறதாமே என்று கேட்கிறார்கள். ஜி.கே. வாசனுக்கும் காங்கிரசில் இணைவதை தவிர வேறு வழியில்லை. அவர் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு வந்தால் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வோம்.

    இலங்கை முகாம்களில் விடுதலைப்புலிகளுக்கு வி‌ஷ ஊசி போட்டு இருப்பது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிரவாதிகளுக்கு இணையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் குமரிஅனந்தன், தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, விஜயதாரணி எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, செல்வப்பெருந்தகை, சிரஞ்சீவி, செல்வம், மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், கராத்தே தியாகராஜன் மற்றும் கவுன்சிலர் பி.வி.தமிழ்ச் செல்வன், ஹசீனாசையத் ஐ.டி.அரசன், துறைமுகம் ரவிராஜ், எஸ்.எம்.குமார், அருள்பெத்தையா, சசிகுமார், இமயா கக்கன், நாச்சிகுளம் சரவணன், கோடம்பாக்கம் ராஜேந்திரன், ராஜசேகர், ஜான்ஆபிரகாம், அசோக்நகர் கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் சத்தியமூர்த்தி பவன் அரங்கில் ராஜீவ் நினைவு கருத்தரங்கம் நடந்தது. இதில் பேராசிரியர் ராஜகோபாலன், முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன் ஆகியோர் பேசினார்கள்.

    காங்கிரஸ் மருத்துவ பிரிவு தலைவர் கலீல் ரகுமான், டாக்டர் அசார் உசேன் ஏற்பாட்டில் நடந்த ரத்ததான முகாமில் 73 பேர் ரத்ததானம் செய்தனர்.
    Next Story
    ×