search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்
    X

    மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

    • பெண்களுக்கு திருமாங்கல்யமே பிரம்ம முடிச்சு ஆகும்.
    • திருமாங்கல்யம் என்பது ஒரு மங்கலப் பொருள்.

    இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன் பேத்திகள் பார்த்தவர்களின் சுமங்கலித்துவத்திற்கு சிறப்பு கவுரவமும் உண்டு. திருமாங்கல்யமானது ஒரு பெண்மணியின் கழுத்தில் எப்போதும் இருப்பதால் காவலாக தெய்வமாக இருந்து சுமங்கலித்துவதைக் கட்டிக்காக்கும்.

    பெண்களுக்கு திருமாங்கல்யமே பிரம்ம முடிச்சு ஆகும். திருமணமான அனைத்து பெண்களும் தங்கள் ஆயுள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாகவே வாழ விரும்புவார்கள். அதனால் தான் பெண்களுக்கு ஆசி வழங்கும் பெரியவர்கள் " தீர்க்க சுமங்கலி பவா" என்று வாழ்த்துவார்கள். பெண்களின் சுமங்கலி பாக்கியத்தில் தான் கணவரின் ஆயுள் அடங்கியுள்ளது என்பதே இதன் சூட்சுமம். பெண்கள் தங்களின் சுமங்கலி பாக்கியத்தை வலுப்படுத்தவும் கணவரின் ஆயுளை அதிகரிக்கவும் வெள்ளிக்கிழமை விரதம், வரலட்சுமி விரதம், கேதார கவுரி நோன்பு போன்ற விரதங்களை கடைபிடிக்கிறார்கள்.

    நமது முன்னோர்கள் மாங்கல்ய கயிற்றைதான் சுமங்கலித்துவம் நிறைந்த மங்களப் பொருளாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதில் பஞ்ச பூத சக்திகள் நிறைந்து இருப்பதால் சுமங்கலித்துவம் அதிகரிக்கும். அதிலும் பருத்தி இழைகளால் ஆன மாங்கல்யச் கயிற்றிற்கு பஞ்ச பூத தெய்வீக சக்திகளை ஈர்த்து சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி மிகுதி என்பதால் நமது முன்னோர்கள் மாங்கல்யத்தை மாங்கல்யச் சரடில் கோர்த்து பயன்படுத்தினார்கள். இன்றும் பல சமூகத்தினர் திருமாங்கல்யத்தை மாங்கல்ய கயிற்றில் பூட்டியே திருமணத்தை நடத்துகிறார்கள். பழமையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பவர்களை பாராட்ட வேண்டும். ஒரு சில சமுகத்தினருக்கு வம்சாவளியாக தங்க சங்கிலியில் மட்டுமே திருமாங்கல்யம் அணியும் வழக்கமும் இருக்கிறது.

    பராம்பரியத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர்கள் தாலிக் கயிற்றுடன் தங்க சங்கிலியும் அணிகிறார்கள். நவீன காலத்தில் நாகரீகமாக திருமாங்கல்யத்தை தங்கச்சங்கிலியில் சேர்த்து அணிபவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

    தங்கத்தில் திருமாங்கல்யம் அணிபவர்களுக்கு சுமங்கலித்துவம் குறைவாகவும் சரடினால் திருமாங்கல்யம் போடுபவர்களுக்கு சுமங்கலித்துவம் அதிகமாகவும் இருக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. மஞ்சள் கயிற்றிற்கு பாசிட்டிவ் எனர்ஜி அதிகம் என்பதால் தீவினை தோஷங்கள் எளிதில் அண்டாது. கர்ம வினைகளின் தாக்கம் குறையும்.

    திருமாங்கல்யத்திற்கு இவ்வளவு மகத்துவம் இருந்தும் பல பெண்கள் தொழில், உத்தியோகம் மற்றும் கணவனுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக திருமாங்கல்யம் அணியாமலும் இருக்கிறார்கள். கழுத்தில் மாங்கல்யம் இல்லாத பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை குறைவதுடன் பாதுகாப்பும் குறைவு. திருமாங்கல்யம் என்பது ஒரு மங்கலப் பொருள் என்பதால் அணிகலன்களைப் போல் தினமும் அதைக்கழற்றி வைப்பதும் எடுத்து அணிந்து கொள்வதும் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

    பல பெண்கள் கோபத்தில் டிவி சீரியல் நடிகை போல் தாலியை கழட்டி வீசுகிறார்கள். இவ்வாறு செய்யும் பெண்களின் பெண் குழந்தைகளுக்கு மாங்கல்ய தோஷம் ஏற்படும் என்பதால் மனக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

    சுமங்கலித்துவத்தை அதிகரிக்க பெண்கள் 60 வயதிற்கு மேற்பட்ட சுவாசினிகளிடம் வெள்ளிக்கிழமைகளில் நல் ஆசி பெற வேண்டும்.ரெடிமேடாக தங்கச் சங்கிலி கிடைப்பதால் கிடைத்த நேரத்தில் தங்க சங்கிலி வாங்கி திருமாங்கல்யத்தில் சேர்க்க கூடாது. நேரம், பணம் இருக்கும் போது சங்கிலி வாங்கினாலும் பெண்ணின் ஜனன கால செவ்வாயுடன் கோச்சார குரு சம்பந்தம் பெறும் காலத்திலும் கோச்சார செவ்வாய் ஜனன கால குருவுடன் சம்பந்தம் பெறும் காலத்தில் நல்ல முகூர்த்த நாளில், லக்னம் 7, 8-ம் இடம் சுத்தமாக அமைந்த நன்நாளில் திருமாங்கல்யத்தை தங்க சங்கிலியுடன் இணைத்து அணிய சுமங்கலித்துவம் அதிகரிக்கும். கணவருக்கு உடல் ஆரோக்கிய குறைபாடு இருந்தாலும் சீராகி ஆயுள் பலம் அதிகரிக்கும்.

    கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர்.

    Next Story
    ×