என் மலர்
வழிபாடு

ரீத்தாபுரம் புனித ரீத்தம்மாள் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 27-ந்தேதி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
ரீத்தாபுரம் புனித ரீத்தம்மாள் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு அன்பிய கொடி பவனி நெடுவிளை சந்திப்பிலிருந்து இரும்பிலி அரசு ஆரம்பபள்ளி, ஆலயம் வரை நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு செபமாலை, புனித ரீத்தம்மாள் புகழ்மாலை, மாலை 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், திருப்பலி நடைபெறும். திருப்பலிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்டு தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு அன்பிய கலை விழா நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவில் 21-ந்தேதி காலை 8 மணிக்கு நாகர்கோவில் ஆயர் இயக்குனர் அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் மரிய செல்வன் மறையுரையாற்றுகிறார்.
விழாவில் 27-ந்தேதி காலை 7 மணிக்கு வாணியகுடி பங்கு அருட்பணியாளர் சகாய ஆனந்த் தலைமையில் முதியோர், நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கான திருப்பலி நிறைவேற்றி ம்றையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி ஆடம்பர மாலை ஆராதனை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி தூய ஆவியார் பெருவிழா பங்கின் குடும்ப பெருவிழா, காலை 6.30 மணிக்கு முதல் திருப்பலியை ரீத்தாபுரம் பங்குபணியாளர் ஜேசுதாசன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். 8.30 மணிக்கு பெருவிழா ஆடம்பர திருப்பலியை பார்வதிபுரம் பங்கு பணியாளர் ஹிலாரியுஸ் நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு தேர்பவனி, மாலை 5.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடி இறக்கம், 6.30 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டுவிழா ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவை, நிதிக்குழு, தணிக்கைகுழு, திருச்சிலுவை அருட்சகோதரிகள், பங்கு அருட்பணியாளர்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.






