search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகை புதிய கடற்கரையில் சிவபெருமானுக்கு, அதிபத்த நாயனார் தங்க மீன் வழங்கும் விழா
    X

    தங்க மீனை (அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது) சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விட்டபோது எடுத்த படம்.

    நாகை புதிய கடற்கரையில் சிவபெருமானுக்கு, அதிபத்த நாயனார் தங்க மீன் வழங்கும் விழா

    • நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவிலில் அதிபத்த நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.
    • இந்த காட்சிகளை கடற்கரையில் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

    நாகையில் நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    அதிபத்த நாயனார், நாகையில் உள்ள நுழைப்பாடி எனும் நம்பியார் நகரில் மீனவ சமுதாயத்தில் பிறந்தவர். சிவ பக்தரான அவர், மீன்பிடி தொழில் செய்து வந்தார். சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டு இருந்த அதிபத்தர் தினமும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவது வழக்கம்.

    சில நேரங்களில் வலையில் சிக்கும் ஒரு மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணித்து விட்டு வெறுங்கையுடன் வீட்டுக்கு செல்வார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இவரது பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான், ஒரு நாள் அவரது வலையில் வெள்ளி மீனை சிக்க வைத்தார். இந்த வெள்ளி மீனை அதிபத்தர் கடலில் விட்டார்.

    அடுத்த நாள், தங்க மீனை சிக்க வைத்தார். அந்த தங்க மீனையும் அவர் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விட்டார். அவரது பக்தியை உணா்ந்த சிவபெருமான், பார்வதியுடன் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு.

    இந்த நிகழ்வை நினைவு கூரும்வகையில் ஆண்டு தோறும் நாகை புதிய கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் அதிபத்தர், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தஆண்டு அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நேற்று நடந்தது. வழக்கமாக நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்கள் ஊர்வலமாக கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த கோவிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடந்து வருவதால் ஊர்வலம் நடைபெறவில்லை.

    இதனால் நேற்று நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்தர் நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களையும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்கள் சீர்வரிசை பொருட்களையும் ஊர்வலமாக புதிய கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து புதிய கடற்கரையில், சீர்வரிசை தட்டுக்களை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை பைபர் படகில் ஏற்றி கடலுக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அதிபத்த நாயனார் வெள்ளி மற்றும் தங்க மீனை பிடிக்கும் காட்சியும், அதை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடும் காட்சியும் அப்போது சிவபெருமான், பார்வதியுடன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இந்த காட்சிகளை கடற்கரையில் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

    Next Story
    ×