search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    பாவம் போக்கும் புண்ணிய நகரம் கும்பகோணம்
    X

    ஆதிகும்பேஸ்வரர்- மங்களாம்பிகை.

    பாவம் போக்கும் புண்ணிய நகரம் கும்பகோணம்

    • புண்ணிய நதிகளில் புனித நீராட இயலாதவர்கள் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
    • இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    மாசி மகம் என்பது ஒரு திருவிழா போல கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திர நாளில் இந்துக்களால் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் துயரப்படும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகமாகும்.

    இந்த நாளில் புண்ணிய நதிகளில் புனித நீராட இயலாதவர்கள் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசிமகம் மகாமக விழாவாக கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

    இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாசிமகம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது கும்பகோணமும், அங்கு உள்ள மகாமக குளமும் தான். பாவம் போக்கும் புண்ணிய நகரமான கும்பகோணத்தில் உள்ள மகாகமகுளத்தில் மாசிமகத்தன்று பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள்.

    ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் இந்த ஆண்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதியும், பெருமாள் கோவில்களில் 26-ந் தேதியும் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மக திருவிழாவின் மிக முக்கிய உற்சவமான மாசி மக தீர்த்தவாரி இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு கும்பகோணம் மகாமகுளத்தில் நடைபெறுகிறது. இதற்காக கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில் இருந்து சாமி புறப்பட்டு கும்பகோணம் மகா மக குளத்தை வந்தடைகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராட உள்ளனர்.

    விழாவை முன்னிட்டு அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் கும்பகோணம் மாநகராட்சியின் சார்பில் மகாமக குளம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்பணிகள் நேற்று இரவு நிறைவடைந்தன. மேலும் மாநகராட்சியின் சார்பில் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் தீர்த்தவாரியில் கலந்து கொள்ள கும்பகோணத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வரவுள்ளதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனை முன்னிட்டு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மகாமக குளத்திற்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்காக ஒருவழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மகாமக குளத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் விழா நடைபெறும் அனைத்து பகுதியும் கண்காணிக்கப்பட உள்ளது. பெண்களின் வசதிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    புனிதம் பெறும் புண்ணிய நதிகள்

    மாசி மகா மகம் அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவிரி உள்ளிட்ட 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற கும்பகோணம் வருவதாக ஐதீகம்.

    Next Story
    ×