search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    மாங்கல்ய தோஷத்தை நிர்ணயம் செய்யும் தசாபுத்தி
    X

    மாங்கல்ய தோஷத்தை நிர்ணயம் செய்யும் தசாபுத்தி

    • மாங்கல்ய தோஷம் பற்றிப் பேசுபவர்கள் அறியாமைவாதிகள்.
    • மனைவியை மிரட்டி அடிபணிய வைத்த காலம் மறைந்து விட்டது.

    ஜோதிட ரீதியாக இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தசாபுத்தி மட்டுமே மாங்கல்ய தோஷத்தின் வீரியத்தை நிர்ணயம் செய்கிறது என்பது தெளிவாகிறது.

    பொதுவாக ஒருவருக்கு 8-ம் அதிபதியின் தசை புத்தி நடப்பில் இருக்கும் போதும் திருமணமான குறுகிய காலத்தில் 8-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி செயல்பட்டாலும் திருமணம் நடத்தி வைத்தால் கண்டிப்பாக கோர்ட், கேஸ், பிரச்சினை, விவாகரத்து ஏற்பட்டுவிடுகிறது அல்லது அவர்களது வாழ்க்கை சங்கடங்கள் நிறைந்ததாகவே அமைந்து விடுகிறது.

    திருமணமாகி குறைந்தது 10 வருடங்களுக்கு மேல் இப்படியான அமைப்பில் தசாபுத்தி பெண்ணுக்கு இருந்தால் அந்தப்பெண் கணவனுக்காக சம்பாதித்துப் போட்டு கணவனின் சுமைகளை இவளே ஏற்றுக் கொண்டு குடும்ப பாரத்தை சுமக்கிறாள்.இப்படியான நிலை ஒரு ஆணுக்கு இருந்தால் தன் மனைவியின் சகோதர, சகோதரிகளையும், மாமனார், மாமியாரையும் தூக்கிச் சுமக்கும் நிலை உருவாகிறது.

    இது சுகமான சுமைதானே. கணவனின் சுமையை தன் மேல் ஏற்றிக் கொண்டு குடும்ப பாரத்தை தாங்கும் இல்லாள் தெய்வப் பிறவி. அவளின் சேவைகள் காலத்தின் பதிவேட்டில் புண்ணிய பலனாக பதிவேற்றம் செய்யப்படும்.

    தன் மனைவியின் குடும்ப பாரத்தைச் சுமக்கும் ஒரு ஆண் காவியத் தலைவன். அவனுடைய தியாகங்கள் மனைவியின் மனதில் ராஜ கோபுரமாக உயர்ந்து நிற்கும். கால கணக்கில் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்த பலனாக எழுதப்படும். இது தம்பதிகளின் அன்யோன்யத்தையும் நெருக்கத்தையும் தானே வெளிப்படுத்துகிறது. இது எப்படி மாங்கல்ய தோஷமாகும்?

    பொருளாதாரம் என்ற விசயத்தை முன்னிலைப்படுத்தி திருமணம் என்ற வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் ஆண்-பெண் இருவருமே சம்பாதித்து குடும்பம் நடத்த வேண்டிய கால சூழல் உலகில் நிலவி வருகிறது. தற்காலத்தில் அனைத்துப் பெண்களும் சுயமாக சம்பாதித்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறார்கள்.

    ஆண்களை முழுமையாக நம்பி வாழும் பெண்கள் குறைவு.கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வாழாவெட்டி, மாங்கல்ய தோஷம் அது, இது என்று பெண்கள் மேல் வாசிக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கை குறைந்து பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்று பேசும் காலம் வந்துவிட்டது. அதே நேரத்தில் சம்பாதிக்காத ஆண்களை பெண்கள் துச்சமாக எண்ணி உதறி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் துணிந்து விட்டார்கள் என்பதால் மனைவியை மிரட்டி அடிபணிய வைத்த காலம் மறைந்து விட்டது. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டு வரும் இந்த காலத்தில் மாங்கல்ய தோஷம் பற்றிப் பேசுபவர்கள் அறியாமைவாதிகள்.

    ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பை மட்டும் வைத்து திருமணம் முடிப்பவர்களும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்பவர்களுக்கும் 8-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் தசா புத்திகள் வலுவாக இயங்கினால் மட்டுமே ஆயுள் குற்றம் உருவாகிறது.

    ஒருவரின் ஜனனம் ஏற்பட்ட நாளில் ஆயுளும் தீர்மானிக்கப்பட்டு விடும். ஒரு பெண்ணின் மாங்கல்ய தோஷத்தால் ஆயுள் குறைவுபடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. ஆயுள் பலம் நிறைந்த ஒருவர் பெண்ணின் ஜாதகத்தில் 8ம் இடம் பலம் குறைந்திருந்தாலும் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் காலம் வரை நிச்சயம் வாழ்வார்.

    ஜனன கால ரீதியாக ஆயுள் பலம் குறைந்த ஒருவரின் மறைவிற்கு மனைவி எப்படி காரணமாக முடியும்.கோடான கோடி மக்கள் தொகையில் ஆண்களின் விகிதாச்சாரம் அதிகமாகவும், பெண்களின் விகிதாச்சாரம் குறைவாகவும் உள்ளது. திருமணத்திற்குப் பெண் கிடைப்பதே அரிதான இந்த கலியுகத்தில் மாங்கல்ய தோஷம் என்ற பெயரில் கிடைக்கும் நல்ல வரனையும் இழக்கும் ஆண்கள் தான் அதிகம்.

    உலவியல் ரீதியாக ஆயுள் குற்றம் என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றால் ஒரு மனிதனுக்கு மரணம் நோய்,விபத்து, தற்கொலை போன்ற காரணங்களால் ஏற்படலாம். 25 வருடங்களுக்கு முன்பு வரை போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் தீராத நோய் என்ற ஒன்று இருந்தது. மருந்துவ வசதி பெருகிய இந்த காலத்தில் எல்லா நோய்க்கும் தீர்வு உண்டு என்பதால் இதை தோஷமாக கருத வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் 6, 8, 12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா புத்திகளில் வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்து கொள்வது அல்லது வீட்டில் பெரியவர்களிடம் கோபித்துக் கொண்டு தனிக்குடித்தனம் செல்பவர்கள் கடன் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்.

    வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களை எதிர்த்துப் போராட தைரியம் இல்லாதவர்கள் கல்யாணம் செய்து கொண்டு மாங்கல்ய தோஷத்தின் மேல் பழிபோடுவது நியாயமா?விபத்து என்பது மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ஒரு செயல். ஆயுள் குற்றம் என்பது ஆயிரத்தில் ஒரு ஜாதகத்திற்கு மட்டுமே உண்டாகும் பிரச்சினை.இதை அனைத்து ஜாதகத்திலும் பொருத்தி பல பெண்களின் வாழ்க்கை யில் திருமணம் என்ற அத்தியாயம் இல்லாமல் செய்வது மிகவும் வருந்தத்தக்க செயல்.

    ஒரு சதவிகிதப் பிரச்சினையான மாங்கல்ய தோஷத்தை நூறு சதவிதப் பிரச்சினையாக உருவகப்படுத்துவதால் மாங்கல்ய தோஷம் என்ற கருத்து உண்மையாகி விடாது. துக்கம், சந்தோஷம், சண்டை, சமாதானம், ஏற்றம், இறக்கம், வெறுப்பு, ஆதரவு இவற்றின் கலவைதான் திருமண வாழ்க்கை.

    பொறுமை, சகிப்புத்தன்மை இன்மையால் பலர் கிடைத்த வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இருப்பதே மாங்கல்ய தோஷத்திற்கு முழுமையான காரணம். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் பிறரின் கோபத்தாலும், சாபத்தாலும் உருவாகுபவை.

    எந்த தோஷமும் தானாக வருவதில்லை. கோபத்தாலும் சாபத்தாலும் தோஷமாக வரவழைக்கப்படுகிறது. ஒருவரின் நடத்தை யாரையும் பாதிக்காத வகையில் வாழப்பழகிக் கொள்ளும் போது கோபமும், சாபமும் நீங்கி மாங்கல்ய தோஷம் என்ற கூற்று செயலற்றுப் போகும். ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் பொறுத்த வரை எப்படியான தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் இணைக்கும் ஜாதகமே நிரந்தர தீர்வு தரக்கூடியதாக இருக்க முடியும்.

    பெண்கள் மாங்கல்ய பலம் அதிகரிக்கவும் திருமண வாழ்க்கை தித்திக்கவும், திருமணத் தடை அகலவும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சுக்கிர ஹோரையில் திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும் அருள்மிகு ஜம்புகேஸ்வரையும் வழிபட சுப பலன் உண்டு.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×