என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

மாதவா! என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வர வேண்டும்!
- அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.
- புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...'' திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள்.
அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.
ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது.
உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா? நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார்.
ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.
அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.
இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள்.
அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு. அக்காரை என்றால் சர்க்கரை.
அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.






