search icon
என் மலர்tooltip icon

    கொலம்பியா

    • முன்னணி அழகான நகரங்களின் பட்டியலில் இந்த நாட்டை ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டது
    • நிறமற்ற திரவமான ஸ்கொபோலமைன் பானங்களில் கலந்தால் தெரியாது

    தென் அமெரிக்காவில் பெரும் பகுதியை கொண்ட நாடு, கொலம்பியா (Colombia). இதன் தலைநகரம் பொகோடா.

    அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.

    மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு பல வருடங்களாக சுற்றுலா செல்கின்றனர்.

    கடந்த 2022 செப்டம்பர் மாதம், பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் அழகான நாடுகளின் பட்டியலில்  இந்நாட்டை முன்னணியில் வைத்தது.

    ஆனால், கடந்த சில மாதங்களாக அந்நாட்டிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினருக்கு ஆபத்தாக உள்ளது.

    அமெரிக்க மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த டவ் கெர் (50), மெடலின் நகருக்கு 2-மாத சுற்று பயணம் சென்றார். தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த டவ் கெர், திடீரென காணாமல் போனார். அவரை கொலம்பியா காவல்துறை தேடி வந்த நிலையில், கொல்லப்பட்ட அவரது உடல் ஒரு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

    சுமார் $2000 பணத்திற்காக அவர் கொல்லப்பட்டது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    டேட்டிங் செயலி ஒன்றில் அறிமுகமான பெண் ஒருவருடன் சென்ற போது அவரை அப்பெண்ணும் அவரது நண்பரும் பணத்திற்காக கொன்றதாக தெரிய வந்துள்ளது.

    இதே போல் ஜெஃப் ஹுவெட் என்பவர் ஓட்டல் அறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

    கடந்த 2023 அக்டோபர் வரை 32 வெளிநாட்டினர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 அமெரிக்கர்கள், 3 இங்கிலாந்து நாட்டவர்கள் என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-ஐ விட 40 சதவீதம் அதிகம்.

    சுற்றுலா பயணிகளுடன் நட்பாக பேசி, அவர்கள் அருந்தும் பானங்களில் "ஸ்கொபோலமைன்" (scopolamaine) எனும் நிறமற்ற போதை மருந்தை கலந்து கொடுத்து, அவர்களை கடத்தி சென்று, உடைமைகளை திருடி, கொலையும் செய்கின்ற கும்பல் அதிகரித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

    அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருக்கவும், எங்கு சென்றாலும் சொந்த நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்குமாறும், கொள்ளை முயற்சியில் சிக்கி கொள்ள நேரிட்டல் எதிர்க்காமல் இருக்குமாறும், தனது நாட்டிலிருந்து அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    • ஒரு ஏழை சிறுவனின் பிறந்த நாளை சக மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பயனர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் பிறந்தநாளன்று புதிய ஆடை அணிந்து பள்ளிக்கு சென்று சக மாணவ- மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் இவையெல்லாம் ஏழை மாணவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாததாகவே உள்ளது.

    இந்நிலையில் ஒரு ஏழை சிறுவனின் பிறந்த நாளை சக மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பயனர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. கொலம்பியாவின் எபிஜிகோ பகுதியை சேர்ந்த சிறுவன் ஏஞ்சல் டேவிட். 8 வயதான இந்த ஏழை சிறுவன் இதுவரை பிறந்தநாளை கொண்டாடியது கிடையாது.

    இந்நிலையில் அவனது 8-வது பிறந்தநாளை அறிந்த பள்ளி ஆசிரியர் காசாஸ் சிமெனா அந்த சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வகுப்பறையில் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டார்.

    அதன்படி சிறுவன் டேவிட் வகுப்பறைக்கு வந்த போது சக மாணவர்கள் அவரை கைதட்டி, பிறந்தநாள் வாழ்த்து, பாட்டு பாடி வரவேற்றுள்ளனர். மேலும் வகுப்பறையில் பலூன்கள் கட்டி, அலங்காரம் செய்து சிறுவனின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • கவுகா அருகே உள்ள டிம்பா போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது.
    • போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கவுகா:

    தென்மேற்கு கொலம்பியாவின் கவுகா அருகே உள்ள டிம்பா போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது. திடீரென இந்த கார் வெடித்து சிதறியது. அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.

    மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். அருகில் உள்ள ஒரு பள்ளி, மருத்துவமனை, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன. போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இது பயங்கரவாத தாக்குதல் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்து உள்ளது.

    • கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது.

    பொகோட்டா:

    கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கம் பொகோட்டா, மெடலின் மற்றும் காலி போன்ற பெரிய நகரங்களிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • இறுதிக்கட்ட விசாரணையின்போது, ஒடோனியல் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்
    • ஒடோனியலை பாப்லோ எஸ்கோபாருடன் மட்டுமே ஒப்பிட முடியும் என கொலம்பிய அதிபர் கருத்து

    கொலம்பியா நாட்டில் போதை மருந்து கடத்தலும், அது தொடர்பான கொலைகளும் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அங்கு இக்குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

    அப்படிப்பட்ட ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ உசுகா. இவர் இத்தொழிலில் வடக்கு கொலம்பியாவின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    அமெரிக்காவிற்குள் கடத்தி வரப்பட்ட பல டன்கள் போதை பொருள் கடத்தலை ஒடோனியல் நிர்வகித்துள்ளார். இதனால் அவரை அமெரிக்கா தேடி வந்தது. ஒடோனியல் தலைக்கு அமெரிக்கா சுமார் ரூ.40 கோடி ($5 மில்லியன்) பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

    ஒடோனியல் தனது எதிரிகளை கொல்ல இரக்கமின்றி உத்தரவிட்டார். மேலும் பலரை சித்ரவதை செய்துள்ளார். ஒருவரை உயிருடன் புதைத்தார். பொது மக்களை பயமுறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    போலீஸ் தாக்குதலில் அவரது சகோதரர் கொல்லப்பட்ட பிறகு, ஒரு நாள் முழுவதும், "வீட்டிலேயே இருங்கள் அல்லது உயிரை இழப்பீர்கள்" என பொதுமக்களுக்கு உத்தரவிட்டு விட்டு காவல்துறையினரை கொல்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்து அவர்களை வேட்டையாடினார்.

    இந்நிலையில், 2021ம் வருடம், நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கொண்ட தேடுதல் வேட்டை ஒன்றில் இறுதியாக அவரது மறைவிடத்தில் இருந்து ஒடோனியல் கைது செய்யப்பட்டார்.

    அதன்பின்னர், கொலம்பியாவில் இருந்து அவரை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது. கொலம்பியாவுடன், 'நாடு கடத்தல்' நடைமுறைகளை அமெரிக்கா துவங்கியபோது, ஒரு நிபந்தனையாக அவருக்கு ஆயுள் தண்டனையை அமெரிக்க அரசாங்க வக்கீல் கோர வேண்டாம் என்று கொலம்பியா கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

    அதன்பின்னர் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஒடோனியல் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதாகவும், தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஒடோனியல் கூறினார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

    கொலம்பிய அதிபர் இவான் டுக், ஒடோனியலை குறித்து கூறியதாவது:

    ஒடோனியலை, போதைப்பொருள் கடத்தலில் பெரும்புள்ளியாக திகழ்ந்த பாப்லோ எஸ்கோபாருடன் மட்டுமே ஒப்பிட முடியும். அவர் உலகின் மிகவும் ஆபத்தான கடத்தல்காரர் மட்டுமல்ல, பல சமூக தலைவர்களை கொலை செய்தவர். சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளம் பருவத்தினரை துஷ்பிரயோகம் செய்தவர். மேலும், பல காவல்துறையினரை கொன்றவர்.

    இவ்வாறு அதிபர் டுக் தெரிவித்தார்.

    • ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள்.
    • இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

    அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து டுவிட்டரில் அக்கட்சி வருத்தம் தெரிவித்தது. மேலும், விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காக சென்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.
    • விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை மற்றும் 4 வயது சிறுவனும் அடங்குவார்கள்.

    கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர்.

    இந்த நிலையில், திடீரென விமானம் விபத்தில் சிக்கியது. விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், விமானி அவசரநிலையை அறிவித்து உள்ளார்.

    இதன்பின் விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால், அதனை கண்டறிவதில் மீட்பு குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும், 40 நாட்களாக விமானம் விழுந்த அமேசான் வன பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

    இதில், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால், சிறுவர்கள் 4 பேர் உயிருடன் இருந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டனர்.

    இதுபற்றி கொலம்பியாவின் அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கூறும்போது, இந்த சிறுவர்கள் தப்பி பிழைத்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களின் காலம் வரலாற்றில் இடம்பெறும் என கூறியுள்ளார்.

    விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை மற்றும் 4 வயது சிறுவனும் அடங்குவார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வடகிழக்கில் எல். கார்மன் என்ற ஊரக பகுதியில் அமைந்து உள்ள ராணுவ தளம் மீது இந்த கொரில்லா குழுக்கள் திடீர் தாக்குதல்.
    • வீரர்கள் நார்தே டி சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையை பாதுகாக்கும் பணிக்காக ஈடுபட்டு இருந்தனர்.

    கொலம்பியா நாட்டில் அரசுக்கு எதிராக தேசிய விடுதலை ராணுவ கொரில்லாக்கள் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    நாட்டில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது.

    இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கில் எல். கார்மன் என்ற ஊரக பகுதியில் அமைந்து உள்ள ராணுவ தளம் மீது இந்த கொரில்லா குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் 9 வீரர்கள் மரணம் அடைந்து உள்ளனர். தவிரவும், 9 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இதனை கொலம்பியா ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இந்த வீரர்கள் நார்தே டி சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையை பாதுகாக்கும் பணிக்காக ஈடுபட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ பகுதியில் நிலைமையை ஆய்வு செய்ய தேசிய ராணுவ தளபதி ஜெனரல் லூயிஸ் மொரீசியோ ஆஸ்பினா சென்றார்.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அமைதி மற்றும் பொதுமக்களிடம் இருந்து தேசிய விடுதலை ராணுவ கொரில்லாக்கள் முற்றிலும் அந்நியப்பட்டு உள்ளனர் என அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

    • கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்தது.
    • இதில் பெண் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    பொகாடோ:

    தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ தளவாடங்களை வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் இருந்தனர்.

    அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்துக்கு அந்நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இரங்கல் தெரிவித்தார்.

    • சுரங்கத்தினுள் செல்லச் செல்ல ஆக்சிஜன் அளவு குறைவதாக கவர்னர் நிகோலஸ் கார்சியா கூறியுள்ளார்.
    • கொலம்பியாவின் முக்கிய ஏற்றுமதியாக எண்ணெய் மற்றும் நிலக்கரி உள்ளது.

    போகட்:

    கொலம்பியாவில் சுததவுசா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளி ஒருவரின் கருவியில் இருந்து தீப்பொறி பட்டு, அங்கு பரவியிருந்த வாயு தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும்,mine தீப்பற்றிய பகுதியில் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் அப்பகுதி கவர்னர் நிகோலஸ் கார்சியா தெரிவித்தார்.

    தொழிலாளர்கள் 900 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருப்பதால், அங்கு செல்வது மீட்புக்குழுவினருக்கு கடினமாக பணியாக உள்ளது என்றும், உள்ளே செல்லச் செல்ல ஆக்சிஜன் அளவு குறைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    கொலம்பியாவின் முக்கிய ஏற்றுமதியாக எண்ணெய் மற்றும் நிலக்கரி உள்ளது. சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அருகில் உள்ள எரிபொருள் டேங்குகளில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மூன்று நாட்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தீயணைப்பு துறை கூறி தெரிவித்துள்ளது.

    பாரன்கில்லா:

    கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள பாரன்கில்லா துறைமுகம் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்த எரிபொருள் டேங்க் நேற்று இரவு திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு வெளியேறினர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள எரிபொருள் டேங்குகளில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தீயணைப்பு துறை கூறி தெரிவித்துள்ளது.

    தீயணைப்பு பணியின்போது ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். ஜேவியர் சோலனோ (வயது 53) என்ற அந்த வீரர், கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்ததாக தீயணைப்பு துறை தலைவர் ஜேமி பெரேஸ் தெரிவித்தார். குடோனில் உள்ள மற்ற டேங்குகளுக்கு தீ பரவாமல் தடுப்பதே தங்கள் குறிக்கோள் என்றும் அவர் கூறினார். தீ விபத்து காரணமாக துறைமுக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    • நிலச்சரிவில் சிக்கி 8 சிறுவர்கள் உள்பட 34 பேர் பலியாகி உள்ளனர்.
    • தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பகோடா:

    தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நதிகளின் ஓரம் உள்ள பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

    இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 27 பேர் பலியாகினர் என தெரிவித்தார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8 சிறுவர்களும் அட்ங்குவர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    ×