என் மலர்
சினிமா செய்திகள்

நல்ல படங்களுக்கு திரையரங்குகள் வழங்கப்படுவதில்லை - நடிகர் ஆரி வேதனை
நடிகர் ஆரி நடிப்பில் கடந்த வாரம் (பிப். 27) வெளியான திரைப்படம் ஃபோர்த் ஃப்ளோர். இந்தப் படத்தில் நடிகர் ஆரியுடன் பவித்ரா அரவிந்த், தீப்ஷிகா சந்திரன், சுப்ரமணிய சிவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இந்தப் படம் வெளியான நிலையில், ஃபோர்த் ஃப்ளோர் படத்திற்கு மால்களில் திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்று நடிகர் ஆரி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான "சல்லியர்கள்" திரைப்படத்திற்கும் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, திரையரங்குகள் வழங்கப்படாததால் சல்லியர்கள் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியடப்பட்டது. மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படாததற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இந்த வரிசையில், தற்போது நடிகர் ஆரி தன் நடிப்பில் வெளியாகி இருக்கும் "ஃபோர்த் ஃப்ளோர்" திரைப்படத்திற்கு மால்களில் திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நடிகர் ஆரி, "தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானமாக இருக்கிறது. நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படுவதில்லை. கேட்டால், விளம்பரம் போதவில்லை என்கின்றனர். அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்ற படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. படம் பிடித்துள்ளதா, இல்லையா என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்," என்றார்.






