என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.
    சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.

    இந்தியாவின் முதல் சினிமா படமான "ராஜா அரிச்சந்திரா''வை தயாரித்தவர் தாதாசாகிப் பால்கே. வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறவர்களுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு பால்கே பெயரால் விருது வழங்குகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.

    1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை.

    இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள். கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

    "பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    "எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.

    சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

    இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.

    குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.

    சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.

    சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான்.

    அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன். அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள்.

    குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது. மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள்.

    இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.

    நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம்.

    ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது.

    ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது. "இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம்.

    கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.

    அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை.

    பின்னர் நான் எழுந்தேன். "இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.

    "சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு. அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.

    வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார்.

    சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.

    இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநíதி'' என்றார்.

    நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.

    மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம்.

    குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.

    இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன்.

    தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.

    தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது.

    மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம்.

    ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம். தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி.

    நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ï பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.

    அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன்.

    நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம்.

    அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.

    பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு.

    அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.
    கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

    பாலசந்தரின் சொந்த பட நிறுவனம் "கவிதாலயா.'' அந்த நிறுவனத்தின் பெரும்பாலான படங்களை பாலசந்தர் டைரக்ட் செய்தார் என்றாலும், நிறுவனத்தின் பொருளாதார நிலையை வலுவாக வைத்துக்கொள்வதற்காக, இடையிடையே சில கமர்ஷியல் படங்களையும் தயாரிக்க வேண்டியிருந்தது.

    புரட்சிகரமான, புதுமையான, பரீட்சார்த்தமான படங்களை டைரக்ட் செய்து வந்த பாலசந்தர், கமர்ஷியல் படங்களை இயக்க விரும்பவில்லை. மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய படங்களை - அதாவது மசாலா படங்களை தயாரிப்பதற்கு வேறு திறமை வேண்டும் என்று கருதினார்.

    இந்த முடிவுக்கு வந்தபின் பாலசந்தரின் மனக்கண் முன் தோன்றியவர் எஸ்.பி.முத்துராமன்தான். கருத்துள்ள படங்களையும், கமர்ஷியல் படங்களையும் டைரக்ட் செய்யக்கூடிய திறமையைப் பெற்றவர் அவர். அதே சமயம் சினிமாத்தனங்கள் இல்லாத -எல்லோராலும் மதிக்கப்பட்ட இயக்குனராகவும் திகழ்ந்தார்.

    ரஜினியை தந்தை, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து, "நெற்றிக்கண்'' என்ற படத்தை தயாரிக்க பாலசந்தர் முடிவு செய்தார். அந்தப் படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பை எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

    லட்சுமி, சரத்பாபு, மேனகா, சரிதா ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர்.

    15-8-1981-ல் வெளிவந்த "நெற்றிக்கண்'' மகத்தான வெற்றி பெற்றது.

    பிறகு, ரஜினியை வைத்து "நான் மகான் அல்ல'', "வேலைக்காரன்'', "புதுக்கவிதை'', "ராகவேந்திரா'' ஆகிய படங்களை பாலசந்தர் தயாரிக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

    "வேலைக்காரன்'' படத்தில், ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்தார். படம் "மெகாஹிட்.''

    ரஜினிகாந்தின் நூறாவது படம் "ராகவேந்திரா.''

    ரஜினி, ராகவேந்திரரின் பக்தர். அதனால், தனது 100-வது படமாக ராகவேந்திரர் வரலாற்றை படமாக்க வேண்டும் என்றும், ராகவேந்திரராக தான் நடிக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

    பாலசந்தரை சந்தித்து, "என்னுடைய நூறாவது படம் ராகவேந்திரர். என்னை திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான் இப்படத்தை தயாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    பாலசந்தர் இதற்கு சம்மதம் தெரிவித்தார். ராகவேந்திரர் படத்தை டைரக்ட் செய்யுமாறு, எஸ்.பி.முத்துராமனிடம் கூறினார்.

    முத்துராமன் தயங்கினார். "ராகவேந்திரர் வேடத்தில் ரஜினி நடிப்பதை அவருடைய ரசிகர்கள் ஏற்கவேண்டுமே! படம் வியாபார ரீதியில் வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வது?'' என்று கேட்டார்.

    "இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது வியாபார ரீதியாக வெற்றி பெறாமல் போனாலும் கவலை இல்லை. ரஜினியின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக படம் அமைந்தால் போதுமானது'' என்று பாலசந்தர் பதிலளித்தார்.

    இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன், லட்சுமி, கே.ஆர்.விஜயா, அம்பிகா ஆகியோர் நடித்தனர். வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார்.

    இப்படம் 1985 செப்டம்பர் 1-ந்தேதி வெளிவந்தது.

    கமர்ஷியல் படங்களுக்கான வரவேற்பை இப்படம் பெறாமல் போனாலும், ரஜினியின் மாறுபட்ட நடிப்பை ரசிகர்கள் வியந்து ரசித்தனர்.

    கமலஹாசனை வைத்து "எனக்குள் ஒருவன்'' படத்தை பாலசந்தர் தயாரித்தார். பூர்வஜென்மம் பற்றிய கதை இது.

    கமலஹாசன் புதுமையான வேடத்தில் நடித்தார். சத்யராஜ், ஸ்ரீபிரியா ஆகியோரும் நடித்தனர். இந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார்.

    மற்ற பட அதிபர்கள் தயாரித்த படங்களிலும் ரஜினிகாந்த்தை இயக்கியவர் முத்துராமன். "ஆறிலிருந்து அறுபது வரை'', "எங்கேயோ கேட்ட குரல்'' ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் ரஜினியை நடிக்க வைத்தார்.

    எனவே, "ரஜினிகாந்த் என்ற வைரத்தை நான் கண்டுபிடித்தேன். அந்த வைரத்தை பட்டை தீட்டியவர் எஸ்.பி.முத்துராமன்'' என்று பாலசந்தர் பாராட்டியுள்ளார்.

    "பாலசந்தர் பெரிய டைரக்டர். அவர் படங்களை இயக்கும் வாய்ப்பை நீங்கள் பெற்றீர்கள். அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி? நீங்கள் டைரக்ட் செய்யும்போது, பாலசந்தர் தலையிட்டு ஏதாவது ஆலோசனைகள் கூறுவாரா?'' என்று கேட்டதற்கு பதிலளித்து முத்துராமன் கூறியதாவது:-

    "படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், கதையை கேட்பார். ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதைச் சொல்வார்.

    அதன் பிறகு, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வரவேமாட்டார். படப்பிடிப்பு முடிந்த பிறகு, முதல் பிரதியை அவருக்குப் போட்டுக்காட்டுவோம். அவ்வளவுதான்.

    படப்பிடிப்பு செலவுகளில் சிக்கனம் பார்க்கமாட்டார். "நீங்கள் ஏவி.எம்.ஸ்டூடியோவில் பணியாற்றுகிறீர்கள். அங்கு, பணத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை சிறப்பாகத் தயாரிக்கிறார்கள். அதேபோலவே இங்கும் செலவைப்பற்றி சிந்திக்காமல், படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும். சிக்கனம் பார்க்காதீர்கள்'' என்று என்னிடம் கூறுவார்.

    அவருடைய படங்களில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத -மகிழ்ச்சியான அனுபவம்.''

    இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
    பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
    பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

    வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா?

    இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி "47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.

    இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-

    "முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.

    நான் எழுதிய "47 நாட்கள்'' கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.

    தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.

    பாலசந்தர் என்னிடம், "47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது'' என்றார்.

    திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா!

    என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் "ஆமாம்'' என்று தலையசைத்தார்.

    "ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.

    "47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.

    கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

    டைரக்டர் ஆவதற்கு நடிகை லட்சுமிக்கு ஊக்கம் அளித்தவர், பாலசந்தர்.

    இதுபற்றி லட்சுமி கூறியிருப்பதாவது:-

    "ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டு பிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் என்னுடைய குரு கே.பாலசந்தர். படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை "மன்மதலீலை''யின் கதாநாயகி ஆக்கியவர். சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியவர்களை படங்களில் வில்லன்களாக நடிக்க வைத்தவர்.

    நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் சொன்னபோது, "உனக்கு அதற்கான திறமை இருக்கிறது. தைரியமாகச் செய்!'' என்று ஊக்கப்படுத்தியதோடு, அவர் டைரக்ட் செய்யும் நிறுவனத்திலேயே எனக்கு டைரக்ட் செய்ய வாய்ப்பு கொடுத்தார்.

    "லட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். அதற்கு பாலசந்தர் உதவி செய்கிறாராம். படத்தின் முடிவு எப்படி இருக்கும்?'' என்று வாசகர் ஒருவர், ஒரு பத்திரிகையில் கேள்வி கேட்டிருந்தார். "படம் ஓடினால் லட்சுமிக்கு பெயர். தோல்வி அடைந்தால் பாலசந்தரை திட்டுவார்கள்'' என்று பதில் எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை. இது முற்றிலும் உண்மை.

    நான் டைரக்ட் செய்வதற்கு பாலசந்தர் தைரியம் கொடுத்தார். பாலசந்தரின் மேற்பார்வையில் விசுவும், நானும் ஒரே சமயத்தில் டைரக்ட் செய்யக் கற்றுக்கொண்டோம் என்று சொல்லலாம்.

    "மழலைப்பட்டாளம்'' ஓடியவுடன், அது பாலசந்தரின் மேற்பார்வையில் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை மறந்து விட்டு, "அடுத்த படத்தை எப்போது டைரக்ட் செய்யப்போகிறீர்கள்?'' என்று என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். படம் ஓடாமல் இருந்தால், அவரைத்தானே திட்டி இருப்பார்கள்!

    "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் என் சிறந்த நடிப்புக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்காக சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.

    நான் மேடையில் இருந்து கீழே இறங்கியபோது, பாலசந்தர் "ஒரு நிமிடம்'' என்றார். நான் அவர் பக்கம் திரும்பினேன். "நவக்கிரகம் செட்டில் நான் ஒரு வார்த்தை சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா?'' என்று கேட்டார்.

    அவர் முன்பு சொன்னது என் நினைவுத் திரையில் நிழலாட ஆரம்பித்தது. "நவக்கிரகம்'' படப்பிடிப்பு நடந்து வந்தபோது, "நான் திருமணம் செய்து கொண்டு, திரை உலகில் இருந்து விலகிவிடப்போகிறேன்'' என்று அவரிடம் கூறினேன்.

    "சாவித்திரி, பானுமதி, சவுகார்ஜானகி இவர்கள் மூன்று பேருக்குப் பிறகு, அந்த லிஸ்டில் யாருமில்லை. நீ இந்தப் பட உலகை விட்டு போகக்கூடாது. இதை அதிகாரமாகச் சொல்லவில்லை. இது என் வேண்டுகோள்'' என்று பாலசந்தர் கூறினார்.

    இதைத்தான் பாலசந்தர் நினைவு படுத்தினார்.

    "அன்றைக்கு நான் சொன்னேனே லட்சுமி! சினிமா உலகில் நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே தேசிய விருது வாங்க முடிந்தது!'' என்றார்.

    "ஆமாம் சார். ரொம்ப சந்தோஷம். தேசிய விருது வாங்குகிற அளவுக்கு நடிப்பிலே என்னை வளர்த்து இருக்கிறீர்கள். அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னேன்.''

    இவ்வாறு லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

    பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
    பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "களத்தூர் கண்ணம்மா'' (1960) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கமலஹாசன். அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

    அதன் பின்னர் நாலைந்து வருடம் குழந்தையாகவும் நடிக்க முடியவில்லை; வாலிபனாகவும் நடிக்க முடியவில்லை. எனவே நடனம் கற்றுக்கொண்டார். சில படங்களில் உதவி நடன இயக்குனராகவும், உதவி டைரக்டராகவும் பணியாற்றினார்.

    இந்த சமயத்தில்தான் அவர் பாலசந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    அதுபற்றி கமலஹாசன் கூறியிருப்பதாவது:-

    "ஜெமினிகணேசன்தான் என்னை முதன் முதலாக பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார்.

    அப்போது, "அன்னை வேளாங்கண்ணி'' படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த ஜெமினி, "என்னடா இது! இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே! நடிக்க வேண்டாமா?'' என்று கேட்டார்.

    "நீங்க வேற! யார் சார் கூப்பிடறாங்க!'' என்றேன்.

    உடனே அவர் என்னை பாலசந்தரிடம் கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தார். "ரொம்ப சின்னப் பையனா இருக்கானே!'' என்றார், பாலசந்தர்.

    உடனே ஜெமினிகணேசன், பாலசந்தர் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி, எனக்குப் போட்டு விட்டு, "இப்போது பாருங்க! பெரிய பையனா இல்லே?'' என்று கேட்டார்.

    பாலசந்தர், "எனக்கு கண் தெரியவில்லையே!'' என்றார். ஒரே சிரிப்பு.

    இது நடந்து கொஞ்ச நாளில் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனக்கு ஒரே வருத்தம்.

    சில நாட்கள் கழித்து அவர் குணம் ஆனதும், என்னைப் பற்றி விசாரித்து இருக்கிறார். "அந்தப் பையனைப் பார்த்தது நினைவு இருக்கிறது. அழைத்து வாருங்கள்'' என்று கூறி ஆள் அனுப்பினார்.

    அவரை போய்ப் பார்த்தேன். அரங்கேற்றத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பின் நடந்தது, உங்களுக்குத் தெரியும்.

    "கமலஹாசன் ஒரு ஆக்டர்'' என்பதை திருப்பித் திருப்பி ஆணி அடிச்ச மாதிரி சொல்லிக்கொண்டே இருந்தது பாலசந்தர் ஒருவர்தான்.

    நான் அவருக்குத் தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். என்றாலும், விடாமல் என்னை பயன்படுத்தியிருக்கிறார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, நிழல் நிஜமாகிறது, தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், மரோசரித்ரா, வறுமையின் நிறம் சிவப்பு... இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்தேன். அவர் எடுத்த "ஆய்னா''வில் (இந்தி "அரங்கேற்றம்'') கூட ஒரு சின்ன ரோலில் வருவேன். அவர் என்னை பயன்படுத்தினார்.... உருவாக்கினார். பெருமைக்குரிய திரையுலகத் தந்தையாக அவர் எனக்குக் கிடைத்தார்.

    அவர் என்னிடம் ரொம்பப் பிரியமாக இருப்பார். அதே சமயம், அவரிடம் அதிகமாகத் திட்டு வாங்கியவனும் நான்தான்.

    எனக்கு வந்த கடிதங்களில் "பொக்கிஷம்'' என 2 கடிதங்களைப் பாதுகாத்து வருகிறேன். இரண்டையுமே எழுதியவர், மதிப்பிற்குரிய பாலசந்தர்தான்.

    நூறு படங்களில் நான் நடித்து முடித்ததற்கான விழாவுக்கு, உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. என்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். வணங்கிய என்னை வாழ்த்தி, முன்பே அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து "இங்கேயே படி'' என்றார். அந்தக் கடிதம்:-

    எனது கமலுக்கு ஒரு மாபெரும் விழா எடுக்கும்பொழுது, அதில் நான் பங்கு கொள்ள முடியாமல் போனது துர்பாக்கியம். நூறு உனக்கு பெரிதல்ல. இன்னும் ஆயிரம் நூறுகள் போடப்போகிறாய். இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்யப் போகிறாய். உனது சாதனைகள் அனைத்தும், எனக்கும் பெருமை தேடித்தரும் என்று எண்ணுகிறவன் நான்.

    கமல் ஒரு தனி நபரல்ல. ஒரு பெரிய நிறுவனம்.

    வாழ்க உனது நாமம்! வாழ்க உனது பெருமை!

    வாழ்த்துக்களுடன்

    அன்பன்,

    கே.பாலசந்தர்.''

    இக்கடிதத்தை, கண்களில் நீர் துளிக்கப் படித்தேன்.

    மற்றொரு கடிதம்: "பதினாறு வயதினிலே'' படத்தைப் பார்த்துவிட்டு பாச மிகுதியால் "மை டியர் ராஸ்கல்'' என்று ஆரம்பித்து, பாலசந்தர் எழுதியது என் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு இதுதான் எனக் கருதுகிறேன்.

    அவருடைய திரைப்படங்களில், டைட்டில் கார்டில் "திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - கே.பாலசந்தர்'' என்று போட்டிருக்கும். மூன்றிலும் அவர் சிறந்தவர்.

    "என்னுடைய கலை உலகத் தந்தை மூன்றிலுமே சிறந்தவர்'' என்று சொல்லக்கூடிய பெருமிதத்தை எனக்குத் தந்திருக்கிறார்.''

    இவ்வாறு கமலஹாசன் கூறியுள்ளார்.



    சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.
    சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    "சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

    நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

    சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

    "நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.

    இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

    கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

    அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

    சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.

    நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

    சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

    அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.

    ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

    இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

    அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

    நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

    "நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

    அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

    நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.

    "என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.

    "இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

    இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

    இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

    தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

    "ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''

    - இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

    நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.

    "இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மíண்டும் சொன்னார்.

    எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.

    "இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

    அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.


    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

    கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.

    "மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.

    "அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!

    படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவிëëலை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.

    ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.

    இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

    அவர்கள் எண்ணியதுபோலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.

    பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.

    பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''

    பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

    படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''

    கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.

    அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.

    இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!

    பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.

    "மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.

    இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.

    "மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.

    "மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.

    வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.

    வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.

    "ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.

    அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.

    கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.

    சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.


    டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.
    டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.

    "அபூர்வ ராகங்கள்'' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.

    தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

    அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!

    ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?'' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.

    அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.

    வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.

    இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.

    மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.

    ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.

    மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!

    கத்திமேல் நடப்பது போன்ற கதை.

    கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!

    கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!

    தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.

    "யார் இந்தப் புதுமுகம்?'' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.

    கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.

    "ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்'' என்று கூறுகிறார், பாலசந்தர்.

    ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

    "மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது "கவுரவ வேடம்'' போன்றதுதான்.

    ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.

    இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

    மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

    பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-

    "திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

    தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக "அபூர்வ ராகங்கள்'' படத்தில் அறிமுகமானேன்.

    அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

    அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.''

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.



    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.
    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.

    "அரங்கேற்றம்'' படத்தைத் தொடர்ந்து, பாலசந்தர் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்ற படம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    இது, ஆனந்த விகடனில் "மணியன்'' எழுதிய கதை. இதை மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்து படமாக எடுத்தனர்.

    இந்தப் படம் தயாரானது பற்றி மணியன் எழுதியிருப்பதாவது:-

    "ஆனந்த விகடனில் நான் "இலவுகாத்த கிளி'' என்ற குறுநாவலை எழுதியிருந்தேன். அப்புறம் நானே அதை நாடக வடிவில் தயாரித்தேன். சினிமாப்படங்கள் நூறாவது நாள் கொண்டாடுவது உண்டு. நூறாவது நாள் கொண்டாடிய நாடகம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    அப்படிப்பட்ட ஒரு வெற்றி நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நானும், வித்வான் வே.லட்சுமணனும் ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை.

    நாங்கள் இருவருமாக பாலசந்தரிடம் போனோம். "நாங்கள் இதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில், `சொல்லத்தான் நினைக்கிறேன்' நாடகத்தைப் படமாகத் தயாரிக்க விரும்புகிறோம். நீங்கள்தான் டைரக்ட் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

    சிறிது நேரம் யோசித்தார் அவர் பிறகு, "மிஸ்டர் மணியன்! நல்ல யோசனைதான். ஆனால் இதில் நான் சம்பந்தப்பட வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இது ஒரு பாப்புலர் நாடகம். ஏற்கனவே நீங்கள் டைரக்ட் செய்து விட்டீர்கள். நீங்கள் இருவருமே எழுத்தாளர்கள். நானும் எழுத்தாளன். கருத்து வேறுபாடுகள் வருமே! என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார்.

    நான் சிறிதும் தயங்கவில்லை. "இது உங்கள் குழந்தை. உங்கள் விருப்பப்படிதான் வளர்த்து உருவாக்கவேண்டும். நாங்கள் தலையிடமாட்டோம். கிரியேடிவ் ஆர்டிஸ்டுகளின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பவர்கள் நாங்கள்'' என்று பதில் சொன்னேன்.

    `சொல்லத்தான் நினைக்கிறேன்' படம் உருவாகத் தொடங்கியது. படத்தில் வரும் காட்சிகள் மறக்க முடியாதவை. படத்தைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களிலும் அவை அழியாமல் பதிந்து போயிருப்பது எனக்குத் தெரியும்.''

    இவ்வாறு மணியன் குறிப்பிட்டுள்ளார்.

    "சொல்லத்தான் நினைக்கிறேன்'' 1973 டிசம்பர் 7-ந்தேதி வெளிவந்த படமாகும். இந்தப் படத்தில் சிவகுமார் கதாநாயகன். கமலஹாசன் வில்லன். மற்றும் லட்சுமி, ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோர் நடித்தனர்.

    பின்னர் ஜெமினிகணேசன் சொந்தமாகத் தயாரித்த "நான் அவனில்லை'' என்ற படத்தை பாலசந்தர் இயக்கினார்.

    இதில் ஜெமினிகணேசன், ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டு, பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வார். மாறுபட்ட மேக்கப்களில் அற்புதமாக நடித்தார். ஜெமினிகணேசனின் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்திய படம் இது.

    இதன்பின் அரங்கண்ணல் தயாரிக்க பாலசந்தர் இயக்கிய படம் "அவள் ஒரு தொடர்கதை.''

    வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் "சுகி'' சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் "வாழ்க்கை அழைக்கிறது'' என்ற பெயரில் எழுதிய குறுநாவல்தான் "அவள் ஒரு தொடர்கதை'' என்ற பெயரில் படமாகியது. திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

    வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. தன் குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா பிரமாதமாக நடித்தார். மற்றும் விஜயகுமார், ஜெய்கணேஷ், கமலஹாசன், ஜெய்சித்ரா, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோர் நடித்தனர்.

    இளம் வயது கமலஹாசன், உள்ளத்தைத் தொடும் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். "கடவுள் அமைத்து வைத்த மேடை...'' என்ற பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியிருந்தார், பாலசந்தர்.

    13-11-1974-ல் வெளிவந்த "அவள் ஒரு தொடர்கதை'' மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. அது மட்டுமல்ல, "மக்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படம் அமையவேண்டும்'' என்ற லட்சியத்தில், பாலசந்தர் முழு வெற்றி பெற்றார்.

    "அரங்கேற்றம்'' தமிழ்ப்பட உலகில் எப்படி ஒரு மைல்கல்லோ, அது போல மற்றொரு மைல்கல் "அவள் ஒரு தொடர்கதை.''

    இது இந்தி, தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் படமாகியது.

    இந்தக் காலக்கட்டத்தில் பாலசந்தர் ரொம்பவும் "பிசி''யாக இருந்தார். இரவு -பகல் என்று பாராமல் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.

    இரவில் எவ்வளவு தாமதமாக படுக்கச் சென்றாலும், காலை 6 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவார். சிற்றுண்டிக்குப்பின் காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவார்.

    பாலசந்தர், ஆரம்ப காலத்தில் அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டே, லீவு போட்டுவிட்டு சினிமா படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், "சினிமாவா? வேலையா?'' என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

    பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இதுபற்றி ஆலோசனை கேட்டார். "வேலையை விட்டு விட்டு, சினிமாவுக்கு வந்துவிடலாமா? அதில் நான் வெற்றி பெறமுடியுமா? உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டார்.

    அப்போது ஏவி.எம்., "உங்கள் திறமையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், நான் இப்பொழுதே வருடத்திற்கு 3 படங்கள் நீங்கள் தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று கூறினார்.

    இதனால் பாலசந்தருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தொழிலில் தீவிரமாக இறங்கினார்.

    புரட்சிகரமான கதையைக் கொண்ட "அரங்கேற்றம்'' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.
    புரட்சிகரமான கதையைக் கொண்ட "அரங்கேற்றம்'' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.

    1972-ல் "வெள்ளி விழா'' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.

    அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-

    "ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, "கண்ணா நலமா'' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

    இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.

    கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த "புன்னகை'' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.

    "வெள்ளி விழா'' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.''

    இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

    பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், "தெய்வத்தாய்'' முதல் "வெள்ளி விழா'' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் "அரங்கேற்ற''த்தில் தொடங்குகிறது.

    இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. "ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்'' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.

    "இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்'' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே "அரங்கேற்றம்.''

    வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.

    "களத்தூர் கண்ணம்மா''வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். "கலாகேந்திரா'' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.

    இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

    கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

    இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.

    இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.

    திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.

    ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.

    ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.

    எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

    எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.

    கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.''

    இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.

    "அரங்கேற்றம்'' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.

    தமிழ்த்திரை உலக வரலாற்றில் "அரங்கேற்றம்'' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.
    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.

    இதற்கிடையே, தமிழில் வெற்றி பெற்ற பாலசந்தரின் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளில் எடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை பாலசந்தரே இயக்கினார். இதனால் தென்னாடெங்கும் பாலசந்தரின் புகழ் பரவியது.

    ஜோசப் ஆனந்தன் எழுதிய "இருகோடுகள்'' (1969) ஏற்கனவே நாடகமாக மேடை ஏறி வெற்றி பெற்றிருந்தது. அதை திரைப்படமாக்க "கலாகேந்திரா'' முடிவு செய்தது. திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார்.

    இதன் கதைக்கரு வித்தியாசமானது. விவாகரத்து செய்து கொள்ளும் கணவனும், மனைவியும் எதிர்பாராமல் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது மனைவி கலெக்டர். கணவன், அவளிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா!

    கலெக்டராக சவுகார் ஜானகியும், கணவனாக ஜெமினிகணேசனும், அவருடைய இரண்டாவது மனைவியாக ஜெயந்தியும் நடித்தனர். சுவையான முக்கோண காதல் கதையை அருமையாக எடுத்திருந்தார், பாலசந்தர். வி.குமார் இசை அமைப்பில் "புன்னகை மன்னன் பூழிவிக்கண்ணன்'', "நான் ஒரு குமாஸ்தா'' பாடல்கள் ஹிட்டாயின.

    பாலசந்தரின் மிகச்சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால், அதில் "இருகோடுகள்'' நிச்சயம் இடம் பெறும்.

    இதுபற்றி பாலசந்தர் கூறுவது என்ன?

    "உழைத்து பாஸ் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் எடுத்த படம்தான் "இருகோடுகள்.'' மக்களின் ஆதரவை மிகப்பெரிய அளவில் பெற்றதுகூட உண்மைதான். மாநில மொழிப்படங்களில் சிறந்த படம் என்று, ஜனாதிபதியின் பரிசை பெற்றதும் என்னவோ உண்மைதான்.

    ஆனாலும் ஒரு இயக்குனருக்கு இதுவெறும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதானே! பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனுக்கு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கிடைக்கும் வெற்றி மிகப்பெரிதாகத் தோன்றலாம். ஆனால் ஆற அமர ஆராய்ந்து பார்த்தால், படிப்பே இத்துடன் முடிந்து விடுவதில்லையே. குறுக்கு வழிகளைத் தேடிப்போகாமல் நேர்கோட்டில் நடைபோட்ட எனக்கு, "இருகோடுகள்'' தந்தது இணையற்ற வெற்றிதான். இருப்பினும், இன்னும் எத்தனையோ இருக்கிறது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு ஆயிற்றே! எனவே சினிமாவில் என் படிப்பு தொடர்ந்தது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    1970-ல் வெளிவந்த "பத்தாம்பசலி'' ஒரு தோல்விப்படமாக அமைந்தது.

    அதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "இருகோடுகளை அடுத்து வெளிவந்த பத்தாம் பசலி பெரிய சறுக்கல்.

    ஆனாலும், இப்படம் கற்றுத்தந்த சிறந்த பாடம் ஒன்றும் இருக்கிறது. இதே பத்தாம் பசலி கதையை, இதே திரைக்கதை அமைப்புகளுடன் நான் ஏற்கனவே தெலுங்கில் இயக்கி வெளிவந்தபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதே திரைக்கதை தமிழில் மட்டும் தோல்வியைத் தழுவுவானேன். காரணம் இருக்கத்தான் செய்தது.

    தெலுங்குப்படத்தில் கதாநாயகன் சலம். தமிழ்ப்படத்தில் நாகேஷ். சலம் இத்தகைய வேடத்தில் நடிப்பது இதுவே முதல் தடவை. எனவே புதுமையாக இருந்தது. நாகேஷ் ஏற்கனவே பல படங்களில் பிரமிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகனாக நடிப்பதும் இது முதல் தடவை அல்ல.

    கதை அமைப்பின்படி, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த நாகேசுக்கு இதில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் ஒரு முட்டாள் கதாபாத்திரத்தில் நாகேசை மக்கள் ஏற்கவில்லை.

    பாத்திரத்திற்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, இப்படத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதே ஆண்டு வெளிவந்த "நவக்கிரகம்'' மிகச்சாதாரணமாக அமைந்தது.

    ஒரு இந்திப்படத்தை தழுவி இரு வேடங்களில் சவுகார் ஜானகி நடித்த "காவியத் தலைவி'', சவுகார் ஜானகியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியதே தவிர, பாலசந்தரின் திறமையை எடுத்துக் காட்டும் படமாக அமையவில்லை.

    சிவாஜிகணேசன் பெரும் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.

    `சிவாஜியும், பாலசந்தரும் இணைந்து பணியாற்றினால், அப்படம் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்'' என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில், "எதிரொலி'' என்ற படத்தை ஜி.என்.வேலுமணி தயாரித்தார். இதில், சிவாஜிகணேசனும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்தார்,

    பாலசந்தர். 1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த "எதிரொலி'' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.

    இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை "எதிரொலி'' எனக்கு எடுத்துக் காட்டியது.

    ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்பின், நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு, புன்னகை, வெள்ளி விழா, கண்ணா நலமா முதலான படங்களை பாலசந்தர் எடுத்தார்.

    இவற்றில் "புன்னகை''யை தனது லட்சியப்படமாக பாலசந்தர் கருதினார். அமுதம் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் ஜெமினிகணேசனும், ஜெயந்தியும் நடித்தனர். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் கவனித்தார்.

    1971 நவம்பரில் வெளிவந்த இப்படம், நன்றாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

    இது பாலசந்தருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. "புன்னகை படம், என் முகத்தில் புன்னகையைப் பறித்ததுடன், என்னை மிகப்பெரிய சோதனையில் ஆழ்த்தியது. "முதலில் ரசிகப் பெருமக்களைப் புரிந்து கொள்'' என்பதே, புன்னகை மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம்'' என்றார், பாலசந்தர்.
    நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, "தெய்வத்தாய்'' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.
    நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, "தெய்வத்தாய்'' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

    பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று "மெழுகுவர்த்தி.'' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

    நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது. அவர் பேசும்போது, "பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்'' என்றார்.

    அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க "தெய்வத்தாய்'' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.

    அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.

    சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.

    ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.

    இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.

    அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது'' என்கிறார், பாலசந்தர்.

    "தெய்வத்தாய்'' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

    படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.

    "தெய்வத்தாய்'' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.

    நாடகமாக பெரிய வெற்றி பெற்ற "சர்வர் சுந்தர''த்தை படமாக்க ஏ.வி.எம். நிறுவனம் தீர்மானித்தது. அதன் கதை-வசனத்தை பாலசந்தர் எழுதினார். முத்துராமன், நாகேஷ், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ட் செய்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது.

    அடுத்து, இதே ஆண்டில் முக்தா சீனிவாசன் தயாரித்து டைரக்ட் செய்த "பூஜைக்கு வந்த மலர்'' படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதினார்.

    இதே ஆண்டில் வெளிவந்த "நீலவானம்'' படத்துக்கும் பாலசந்தர் கதை- வசனம் எழுதினார். சிவாஜி கணேசனும், தேவிகாவும் இணைந்து நடித்தனர். தேவிகாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம்.

    இந்த படத்தை டைரக்ட் செய்தவர் பி.மாதவன். "நீலவானம்'' சிறந்த படமாக அமைந்தது. இந்த சமயத்தில், பாலசந்தர் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு தேடி வந்தது.
    பிறர் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். ரஜினிகாந்தையும், மற்றும் ஏராளமான புதுமுகங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய சாதனையாளர்.
    பிறர் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். ரஜினிகாந்தையும், மற்றும் ஏராளமான புதுமுகங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய சாதனையாளர்.

    சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் தோன்றி, நாடக உலகில் புகுந்து, பிறகு சினிமா உலகிற்கு வந்தார்.

    தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள நல்லமாங்குடி என்ற கிராமம்தான் பாலசந்தரின் சொந்த ஊர்.

    அந்த கிராமத்தின் முன்சீப்பான கைலாசம் அய்யர் -காமாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1930 ஜுலை 9-ந்தேதி பிறந்தார்.

    படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்ததுடன் நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நண்பர்களை வைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையிலேயே நாடகங்கள் நடத்துவார்.

    ஆரம்பக் கல்வி முடித்ததும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு படிக்கும் போதும் நாடக ஆசை தொடர்ந்தது. அவரே கதை -வசனம் எழுதி, முக்கிய வேடங்களில் நடிப்பது வழக்கம்.

    கல்லூரியில் ஹாஸ்டல் தினம், பட்டமளிப்பு விழா என்றெல்லாம் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, பாலசந்தரின் நாடகம் நிச்சயம் இடம் பெறும்.

    "பி.எஸ்.சி'' பட்டம் பெற்ற பின், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை பார்த்தார். ஒரு வருட காலம் ஆசிரியர் பணியில் நீடித்தார். அங்கும், மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.

    அதுமட்டுமல்ல; சட்டசபை எப்படி நடக்கிறது, பாராளுமன்றம் எப்படி நடக்கிறது என்பதை விளக்கும் வகையில், "மாதிரி சட்டசபை'', "மாதிரி பாராளுமன்றம்'' ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி, பாராட்டு பெற்றார்.

    சென்னையில் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில், 1950-ல் பாலசந்தருக்கு வேலை கிடைத்தது. ரத்தத்தில் ஊறிய நாடக ஆசை அப்போதும் தொடர்ந்தது.

    மாலை ஐந்து மணி ஆனதும், அதிகாரிகளும், ஊழியர்களும் அவரவர் வீட்டுக்கு கிளம்புவார்கள். பாலசந்தரோ, ராஜா அண்ணாமலை மன்றம் அல்லது ஆர்.ஆர்.சபாவுக்குப் போவார். "இன்று என்ன நாடகம்? நாளை என்ன நாடகம்? யார் -யார் நடிக்கிறார்கள்?'' என்று அறிவிப்பு பலகைகளைப் பார்ப்பார். முக்கிய நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்த்து விடுவார்.

    அந்தக் காலக்கட்டத்தில், பாலசந்தருக்கு நாடகம் மீதுதான் ஆசை இருந்ததே தவிர, சினிமாவை லட்சியமாகக் கொள்ளவில்லை.

    ஏ.ஜி.அலுவலகத்தில் ஒரு விழா. மேல் அதிகாரியை பாலசந்தர் சந்தித்து, "இந்த விழாவில் நாடகம் நடத்தலாம். நாடகம் நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு'' என்று கூறினார்.

    அதற்கு அதிகாரி அனுமதியளித்தார்.

    உடனே நாடகத்தைத் தயாரிக்கத் தொடங்கினார், பாலசந்தர்.

    சென்னையில் அவர் முதன் முதலாக நடத்திய இந்த நாடகத்தின் பெயர் "சினிமா விசிறி.'' எப்போதும் சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர்தான் இந்த நாடகத்தின் கதாநாயகன்.

    இந்த நாடகத்தின் கதை, வசனம், நடிப்பு அனைத்தும் பாலசந்தர்தான்.

    நாடகத்தைப் பார்த்தவர்கள், பாலசந்தரின் திறமையை வானளாவப் புகழ்ந்தார்கள்.

    (இந்த நாடகம்தான் பிற்காலத்தில் "எதிர்நீச்சல்'' என்ற பெயரில் படமாகியது. சினிமா பித்து கொண்ட கதாநாயகனை, பட்டுமாமி என்ற பெயரில் கதாநாயகியாக மாற்றினார், பாலசந்தர்.)

    "சினிமா விசிறி'' நாடகத்தைப் பார்த்த சினிமா நடிகர் வி.கோபாலகிருஷ்ணன், பாலசந்தரை பார்க்க வந்தார். அவர் தனியாக நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.

    "சினிமா விசிறி நாடகத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிரமாதம். என்னுடைய நாடகம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும்'' என்று பாலசந்தரிடம் கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பாலசந்தர் சம்மதித்தார். கோபாலகிருஷ்ணனின் "உயிருள்ளளவும்'' என்ற நாடகத்தில் நடித்தார். அப்போது பாலசந்தருக்கு வயது 21. நடித்தது அப்பா வேடத்தில்!

    வயதான தோற்றத்தில் அற்புதமாக நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    இதைத்தொடர்ந்து, வி.எஸ்.ராகவன் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு பாலசந்தரை தேடி வந்தது.

    வெளி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலசந்தர் சொந்தமாக "ராகினி ரிக்ரியேஷன்ஸ்'' என்ற பெயரில் நாடகக்குழு அமைத்தார். நாடகம் நடத்த சபாக்களை மட்டும் நம்பியிராமல், திருமண வீடுகளிலும், மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் நடத்தி வந்தார்.

    அப்படி ஒரு திருமண வீட்டில் அவர் நடத்திய நாடகத்தின் பெயர் புஷ்பலதா. "புஷ்பா'', "லதா'' என்ற இரண்டு பெண்களைப் பற்றி மூன்று கல்லூரி மாணவர்கள் அடிக்கும் அரட்டைதான் நாடகம். கடைசிவரை புஷ்பாவோ, லதாவோ வரமாட்டார்கள்!

    பாலசந்தரின் இந்த புதுமை நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.

    ஏ.ஜி.ஆபீஸ் உயர் அதிகாரி மாற்றலாகிச் செல்லும்போது, பிரிவு உபசார விழாவில் பாலசந்தர் நடத்திய நாடகம் "மேஜர் சந்திரகாந்த்.''

    இந்த நாடகத்தை நடத்தும்போது, ஒரு புதுமையைப் புகுத்தினார். மேடைக்கு திரை கிடையாது. மூன்று பக்கமும் திறந்தவெளி! நடிகர்கள் பார்வையாளர்களுடன் அமர்ந்து இருப்பார்கள். நடிக்க வேண்டிய கட்டம் வரும்போது, கூட்டத்தில் இருந்து எழுந்து வந்து நடித்து விட்டுப் போவார்கள்!

    நாடகத்தில் மேஜர் சந்திரகாந்த் வேடத்தில் பாலசந்தர் நடித்தார்.

    இந்த நாடகம், அவருக்கு மேலும் புகழ் தேடித்தந்தது.

    ஏ.ஜி.ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே 1956 மே 13-ந்தேதி பாலசந்தருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ராஜம்.

    ×