search icon
என் மலர்tooltip icon

    தனுசு - சனிப்பெயர்ச்சி பலன்கள்

    தனுசு

    சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

    ஏழரைச் சனி விலகியது! இனிய வாழ்க்கை இனி!

    சனியின் வக்ர காலம்!

    19.6.2024 முதல் 4.11.2024 வரை, 2.7.2025 முதல் 18.11.2025 வரை இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் குடும்பப்பிரச்சினைகள் தலைதூக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. உற்றார், உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். ஊர் மாற்றங்களால் நிம்மதி கிடைக்காது. மிகுந்த கவனம் தேவைப்படும் நேரமிது. பொருளாதாரப் பிரச்சினையும் தலைதூக்கும்.

    தனுசு ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 முதல் 3-ம் இடமான வெற்றிகள் ஸ்தானத்திற்குச் செல்கின்றார். ஏழரைச்சனி விலகி விட்டது, எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தங்கு தடைகள் தானாக விலகும். தனவரவும் திருப்தி தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்!

    டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி பகவான் முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்ல வைக்கப் போகின்றார். இதுவரை ஏற்பட்ட தடைகளும், தாமதங்களும் அகலும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் பதவி வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

    சனியின் பார்வை பலன்கள்!

    உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 5, 9, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகியவை புனிதமடைகின்றது. எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வந்து சேரும்.

    சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பங்குச்சந்தை மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

    சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றமும், இட மாற்றமும் எதிர்பாராமல் வந்து சேரும். ஒரு சிலருக்கு நாடு மாற்றம் வந்து நன்மை தரும். எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நேரமிது. வீட்டுத் தேவைகளுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் நனவாக வழிபிறக்கும்.

    சனியின் பாதசாரப் பலன்கள்!

    செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது(20.12.2023 முதல் 21.2.2024 வரை) செவ்வாய் உங்கள் ராசிக்கு பஞ்சம- விரயாதிபதி என்பதால் பிள்ளைகள் வழியில் பெரும் விரயம் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளி மாநிலம், வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை செலுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். 'வாங்கிய சொத்துக்களை விற்றுவிட்டோமே?' என்று கவலைப்பட்டவர்களுக்குப் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது.

    ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

    உடல் நலத்தில் கவனம் தேவை. உள்ளத்தில் உள்ள எண்ணங்களை உடனடியாக செயல்படுத்த இயலாது. இடம் வாங்கிய வகையில் பிரச்சினை உருவாகும். கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்கக்கூடும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. 'கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.

    குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

    தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு நிரந்தரப் பணி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். ரண சிகிச்சை செய்வதாகச் சொன்ன மருத்துவர்கள், சாதாரண சிகிச்சையிலேயே உங்கள் நோயைக் குணப்படுத்தி விடுவார்கள். மற்றவர்களை நம்பி செய்த காரியம் நல்லவிதமாக முடியும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    குருப்பெயர்ச்சிக் காலம்!

    சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குரு அதன் பார்வை பலத்தால் நற்பலன்களை வழங்கினாலும், மனநிம்மதிக்குறைவு அதிகரிக்கும். 'ஆறில் குரு ஊரில் பகை' என்பது பழமொழி. எனவே வரும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடன் நேருக்குநேர் நன்றாகப் பேசுபவர்கள் கூட மறைமுகமாக சில குறுக்கீடுகளை உருவாக்கலாம். எனவே யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. தொழில் பங்குதாரர்கள் விலகிச்செல்வதாகச் சொல்வர். உத்தியோகத்தைப் பொறுத்தவரை மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

    மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது நற்பலன்கள் உங்களை நாடிவந்து சேரும். உடல் நலம் சீராகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். 'மலை போல் வந்த துயரங்கள் பனி போல் விலகும் நேரமிது'. கல்யாணக் கனவுகள் நிறைவேறும். கடமையில் இருந்த தொய்வு அகலும். கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது இட மாற்றம், வீடு மாற்றங்கள் உறுதியாகும். உத்தியோகத்தில் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கலாம்.

    ராகு- கேது பெயர்ச்சிக் காலம்!

    26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் துணையாக இருப்பர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். இடமாற்றங்கள், மகிழ்ச்சி தரும் விதத்தில் அமையலாம். வழக்குகள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். விரயத்திற்கேற்ற வருமானம் உண்டு.

    வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

    வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக திருநள்ளாறு சென்று காக வாகனச் சனி பகவானை கை தொழுது வழிபட்டால் தேக நலனும் சீராகும். செல்வ நிலையும் உயரும்.

    தனுசு

    சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் நின்ற சனி பகவான் 3ம் மிடமான சகாய ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 12ம் இடமான அயன, சயன விரய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார்.

    சகாய ஸ்தான சனியின் பலன்கள்: தனுசு ராசிக்கு சனி பகவான் 2 ,3ம் அதிபதி.மூன்றாமிடம் என்பது சகாய ஸ்தானம். இளைய சகோதர ஸ்தானம். முயற்சி திட்டமிடுதல் வெற்றி ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம். ஏழரைச் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து உப ஜெய ஸ்தானமான 3ம் இடத்திற்கு சனி பகவான் செல்வதால் தனுசு ராசியினருக்கு மிகப் பெரிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது.

    மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் இந்த ஏழரை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திலிருந்து விடுதலை என்றால் மகிழ்ச்சிக்கு காரணம் கேட்கவா வேண்டும். அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கி விட்டது. ஆயுள் ஆரோக்கியம் சீராகும். பல்வேறு சோதனைகள் சாதனையாகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களை பொற்காலத்திற்கு அழைத்துச் சென்று அழியாத புகழை உங்களுக்கு தரப்போகிறது. உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

    எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிரும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். உடல், முகத்தில் தோற்றப் பொழிவு ஏற்படும். இது வரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடிபுகுவார்கள். வாகன யோகம் சித்திக்கும். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். புத்திர பாக்கியம் ஏற்படும். இந்த கால கட்டத்தில் வேகம் கலந்த விவேகத்துடன் செயல்பட்டு சந்தோஷ மழையில் நனையப் போகிறீர்கள்.

    3ம் பார்வை பலன்: சனியின் 3ம் பார்வை 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இருப்பதால் சாஸ்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் மிகும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மன அமைதி அடைவீர்கள். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. வெளிநாட்டில், வெளி மாநிலத்திலிருந்து பூர்வீகம் வர முடியாமல் தவித்தவர்கள் பூர்வீகம் வந்து உற்றார், உறவினரை கண்டு மகிழ்வீர்கள். அவ்வப்போது குழந்தைகளைப் பற்றிய மன சஞ்சலமும் மனதை வாட்டத்தான் செய்யும். குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். திருமண வயதில் இருக்கும் உங்களின் மகள், மகனின் திருமணத்தை சீரோடும் சிறப்போடும் நடத்துவீர்கள். பல வருடங்களாக தடைபட்ட எண்ணற்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். உங்களின் காதல் விசயம் பெற்றோருக்கு தெரிய வரும்.

    7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை 9ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு இருப்பதால் இதுவரை தடைபட்ட நீத்தார் வழிபாட்டை செய்து முடிப்பீர்கள். காசி, ராமேஸ்வரம், அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று உங்கள் பாக்கிய ஸ்தானத்தை பலம் பெறச் செய்வீர்கள். கோவில் திருப்பணிகளை பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். பல வருடங்களாக நீங்கள் செய்த பிரார்த்தனைகள், வழிபாடுகள் பலன் தரும். தான தர்மங்களில் நாட்டம் மிகும். ஆசை, பேராசை, எதார்த்தம் இந்த மூன்றில் எது நிராந்தரமாக மனிதனை வழி நடத்தும் என்ற உண்மை புரியும். ஏழரைச் சனியின் காலத்தில் கற்ற அனுபவ பாடம் உங்களுடன் பயணம் செய்யும். மாணவர்களுக்கு கல்லூரி உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும்.

    10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை 12ம் இடமான விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் சுப விரயச் செலவுகள் அதிகரிக்கும். மனம் தனிமையை நாடும். பாவம் எது? புண்ணியம் எது?வாழ்நாளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் போன்ற சிந்தனைகள் தோன்றும். மோட்சம் அடையும் மார்க்கத்தில் ஈடுபடும் ஆர்வம் மிகும். சிலருக்கு வைத்தியச் செலவு அதிகரிக்கும்.பிள்ளைகளிடம் கோபித்து கொண்டு முதியோர் இல்லம் சென்ற பெற்றவர்கள் வீடு திரும்புவார்கள். ஏழரை சனியின் காலத்தில் கடனுக்காக தலைமறைவாக வாழ்ந்தவர்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்வார்கள். குடும்ப சூழ்நிலையால் வெளிநாட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்தவர்கள் விடுபடுவார்கள். நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவிப்பவர்கள் நன் நடத்தை காரணமாக விடுவிக்கப்படுவார்கள்.துக்கம் மிகுதியால் தூக்கத்தைத் இழந்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

    சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

    தனுசு ராசிக்கு 5,12ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லோரிடமும் நன்மதிப்பை பெற்றுத் தரும். உங்கள் இன, மத இயக்கங்களின் முதன்மை பதவியும், கவுரவமும் தேடி வரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும் . பலர் சொந்த ஊருக்கு அல்லது சொந்த ஊருக்கு அருகில் பணி மாற்றம் கிடைக்கும். காவல்துறை, ராணுவத்தில் பணிபுரிவர்களுக்கு அதிக அளவிலான பதவி உயர்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் செலவுகளை கட்டுக்குள் வைத்து சேமிப்பை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

    சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

    கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 5ம்மிடத்திலும் அதன் பிறகு ராசிக்கு 4ம்மிடத்திலும் சஞ்சரிக்கும் கோட்சார ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் எப்போது விடிவு காலம் வரும் என்று காத்து இருந்த உங்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது. விற்கப்பட வேண்டிய சொத்தாக இருந்தால் நல்ல விலைக்கு விற்க முடியும். தாய் வழி உறவினர் மூலம் தன வரவு இரட்டிப்பாகும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும்.தனுசு ராசியினர் புதிய காதல் வலையில் மாட்டாமல் மனதை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும். பங்குச் சந்தையால் பெரும் ஆதாயம் உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு விரும்பிய பதவி தேடி வரும்.கடன் தொல்லையிலிருந்து சிறிது சிறிதாக மீள்வீர்கள்.

    17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் தொழில் ஆரம்பித்து கால் ஊன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.தொழிலாளர்களுக்கு குறைந்த வேலைக்கு நிறைந்த வருமானம் கிடைக்கும்.பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது. பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். அடமானச் சொத்து, நகைகளை மீட்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். சிலர் பெற்றோருடன் கருத்து வேறுபாட்டால் தனிக் குடித்தனம் செல்வீர்கள்.

    பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

    தனுசு ராசிக்கு ராசி அதிபதி மற்றும் நான்காம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். ரியல் எஸ்டேட் கட்டுமானப் பணி , சுரங்கத் தொழில் வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்கள் டெக்ஸ்டைல் தொழில் , மருத்துவர்கள் போன்றவர்களுக்கு பொன்னான நேரம். இவர்களுக்கு அரசின் சலுகைகள் , மானியங்கள் எளிதில் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் விலகிய குடும்ப உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சேமிப்பு, சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டும் . புதிதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு தள்ளிப்போகும்.வீடு கட்ட போட்ட பட்ஜெட் எகிறும். புதிய கடன் தொகைக்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகுவீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும். சிலருக்கு சொத்து அடமானத்தின் பெயரில் கடன் பெறும் எண்ணம் தோன்றும்.சொத்து வாங்குதல் , விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு பயணம் செல்லலாம்.

    திருமணம்: தனுசு ராசியைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலருக்கும் திருமணத் தடை இல்லை. அனைத்து கோட்சார கிரகங்களும் சாதகமாக உள்ளதால் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் நல்லாசியுடன் திருமணம் நடக்கும். மறுமண முயற்சி பலிதமாகும். உடனே புத்திர பிராப்த்தம் உண்டாகும்.

    பெண்கள்: கருத்து வேறுபாடுடன் வாழ்ந்த தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லும் போது வீண் மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம்.

    பரிகாரம்: 3,6,11ம் இடங்கள் சனி பகவானுக்கு உகந்த ஸ்தானம். தைரியத்துடன் வீரத்தைக் கொடுக்கும் ஸ்தானம். அழியாப் புகழையும் பெருமையையும் கொடுக்கும் ஸ்தானம். தெய்வ பலம் மனித பலத்தை விட உயர்ந்தது என்பதை சனிபகவான் புரிய வைப்பார்.சனிக்கிழமை அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களள் விதவைகளின் தேவையறிந்து உதவி செய்யுங்கள். சனிக் கிழமை வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    சனிப்பெயர்ச்சி பலன்கள்

    ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

    குடும்பச் சனியின் ஆதிக்கம், வாழ்வில் கடுமை இனிக்குறையும்!

    தனுசு ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசியிலேயே ஜென்மச் சனியாக உலா வந்த சனிபகவான், இப்பொழுது 26.12.2020 அன்று இரண்டாமிடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். ஏழரைச்சனியில், ஜென்மச்சனி விலகி விட்டது. இப்பொழுது 'பாதச்சனி' என்று அழைக்கப்படும் குடும்பச்சனியின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. எனவே குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மங்கல ஓசை மனையில் கேட்கும். செல்வ வளம் சிறப்பாக இருக்கும்.

    மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு சனி சேர்வதால் 'நீச்சபங்க ராஜயோகம்' ஏற்படுகிறது. மேலும் உங்கள் ராசிநாதன் 2-ம் இடத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பண வரவு திருப்தி தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும்.

    சுபகாரியங்கள் நிறைவேறும்

    டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் அகலும். தள்ளிப்போன கல்யாண காரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். எதிரிகளின் தொல்லை குறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறலாம். இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

    சனியின் பார்வை பலன்கள்

    உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றது. கல்வி முன்னேற்றம், சுகம், வாகனம், தாய்வழி உறவு, இழப்புகளை ஈடுசெய்யும் அமைப்பு, எதிர்பாராத இடமாற்றம், ஆரோக்கிய நிலை, வெளிநாட்டு முயற்சி, தொழிலில் லாபம், உத்தியோக உயர்வு போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ளும் இடங்களில் உங்களுக்கு யோகம் தரும் சனியின் பார்வை பதிகிறது. எனவே, அவைகளில் எல்லாம் உங்களுக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. 4-ம் இட பார்வையால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தாய்வழி ஆதரவு உண்டு.

    சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால், ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

    சனியின் பார்வை பதினோராமிடத்தில் பதிவதால், தொழிலில் திருப்திகரமான லாபம் வந்து சேரும். இந்த நேரத்தில் ஒருசிலருக்கு கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகமும் உண்டு. இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். வெளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கலாம். அரசு சார்ந்த பணிகளில் சேர விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல் பிரமுகர்களுக்கு மேலிடத்தின் ஆதரவும், நல்ல பொறுப்புகளும் கிடைக்கலாம். வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து மகிழ்வீர்கள். வாகன யோகம் உண்டு.

    சனியின் பாதசாரப் பலன்கள்

    27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அரசியல் அனுகூலம் பெற்றவர்களின் ஆதரவோடும், உங்கள் வாக்கு வன்மையாலும் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பெற்றோர் வழியில் இருந்த மனவருத்தங்கள் மறையும். தந்தை வழியில் ஆதாயம் தரும் தகவல் உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த பஞ்சாயத்துகள், நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவுகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். 'வீடு வாங்க வேண்டும்', 'வாகனம் வாங்க வேண்டும்' என்ற உங்களின் கனவு நனவாகப் போகின்றது. உஷ்ணாதிக்க நோய்கள் வந்து போகும்.

    28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகவே அமைகின்றது. அஷ்டமாதிபதியாக சந்திரன் விளங்குவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

    27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்போது, பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த கல்யாண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவும், வெளிமாநிலம் செல்லவும் நீங்கள் செய்த முயற்சி கைகூடும். இக்காலத்தில் கும்ப ராசிக்குச் சனி செல்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாங்கிய சொத்தை விற்றுவிட்டு புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராகும்.

    குருப்பெயர்ச்சிக் காலம்

    சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குரு வருகின்றார். எனவே சகோதரர்களால் நன்மை கிடைக்கும். வாழ்க்கைப் பாதையில் புதிய திருப்பம் உண்டாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். தைரியத்தோடு எதையும் செய்வீர்கள். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கப்போகின்றார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டாகும். மித மிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதியப் போவதால் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.

    ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

    21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ் சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத் தக்கதாக இருக்கும். கேது பலத்தால் வருமானம் திருப்தி தரும்.

    8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சகோதர ஒத்துழைப்பு குறையலாம். வாகன மாற்றம் வருவற்கான அறிகுறி தென்படும். தேக நலனுக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு. கேது பலத்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    வெற்றி பெற வைக்கும் வழிபாடு

    வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதோடு இல்லத்துப் பூஜை அறையில் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அனுமன் படத்தை வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபட்டால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.

    ×