search icon
என் மலர்tooltip icon

    கடகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

    கடகம்

    குருபெயர்ச்சி பலன்-2024

    கடகம்- லாப குரு 70%

    அன்பும், பாசமும் நினறந்த கடக ராசியினரே!

    இதுவரை பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் நின்ற குரு பகவான் மே1, 2024 முதல் 11ம்மிடமான லாப ஸ்தானம் செல்கிறார். சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு பகவான் 9ம்மிடமான பாக்கியஸ்தானத்திலும் கேது பகவான் 3ம்மிடமான பராக்கிரம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    லாப குருவின் பொது பலன்கள்:

    கடக ராசிக்கு 6, 9ம் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானமான 11ம்மிடம் செல்லுவது சிறப்பு. அஷ்டமச் சனியால் ஏற்பட்ட இன்னல்களை லாப ஸ்தானத்திற்கு வரும் குரு பகவான் ஈடு செய்யப்போகிறார்.இந்த குருப் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் நிலையை சீர் செய்யவே வருகிறதோ? என்று வியக்கும் வகையில் நற்பலன்கள் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். பாக்கியாதிபதி லாப ஸ்தானம் வருகிறார் என்று நினைக்கும் போதே மனம் ஆனந்த கூத்தாடும்.

    இந்த பிறவியில் உங்களின் பாக்கிய ஸ்தானமும், லாப ஸ்தானமும் ஒருங்கே இணைந்து பலன் தரும் காலம். இந்த பாக்கியம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்க 12 வருடம் காத்திருக்க வேண்டும். லாப குருவாலும் 9ம்மிட ராகுவாலும் வெளிநாட்டு வியாபாரத்தொடர்பை ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உணவுப் பொருள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருளை விற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.

    உணவு, ஆடை ஆபரணங்கள் ஏற்றுமதி தொழிலில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் எண்ணம் தோன்றும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொழில் முடக்கம் இடையூறுகள் சீராகும். தொழிலில் புதிய கிளைகளை துவக்கி நல்ல லாபங்கள் பார்க்கலாம். சம்பளத்திற்கு சென்றவர்கள் கூட புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கூடி வரும். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி மூலம் ஆதாயம் உண்டு.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

    லாப குருவின் 5ம் பார்வை 3ம்மிடமான தைரிய, சகாய ஸ்தானத்தில் பதிகிறது.அங்கே கேது இருப்பதால் நல்லது, கெட்டது நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்த்துச் செயல்பட வேண்டும். தைரியம், தெம்பு கூடும். உங்களின் தோற்றம் பொலிவு பெறும். மனதில் அமைதி குடிகொள்ளும். தடை, தாமதங்கள் விலகி அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். எதற்கும் அஞ்சாமல் கம்பீரமாக சிந்தித்து செயல்படுவீர்கள். சாஸ்த்திர ஞானம் மிகும். அழகாக ஆடம்பரமாக உங்களை அலங்கரிக்க தனி கவனம் செலுத்துவீர்கள்.

    உடன் பிறந்தோரிடம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் மறையும். சகோதர உறவு மேம்படும்.சிறு தூர இடப்பெயர்ச்சி, வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம்.பிறருக்கு உதவும் குணம் அதிகமாகும்.

    செக் மோசடி. பத்திரத்தின் மேல் அடமானம் பெறுதல், கொடுத்தல், ஜாமீன் போன்றவற்றில் கவனம் தேவை. அண்டை, அயலாருடன் ஏற்பட்ட எல்லைத் தகராறுகள் சீராகும். பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்தால் மன உளைச்சல் ஏற்படாது. திருடு போன பொருட்கள் கிடைக்கும்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

    குருவின் 7ம் பார்வை ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. அங்கே 7, 8ம் அதிபதியான சனியின் பார்வையும் பதிகிறது. குல தெய்வ அனுகிரகம் ஏற்படும் காலம் . குல தெய்வ தோஷம், சாபம் இருந்தால் சரி செய்ய மேற்கொள்ளும் வழிபாடு பலன் தரும். குரு சாபம், பிராமணர்களின் சாபத்தால் உருவாகும் பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய உகந்த காலம். புத்திர சோகம் விலகும். உங்கள் மருமகளின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் உங்கள் தேவைக்கு அதிகமாக பணப் புழக்கம் ஏற்படும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி வாய்ப்பு அல்லது பதவி உயர்வு ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவிகள், பொறுப்புகள் தாமாகவே வந்து சேரும். ஒய்வு எடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும் வருமானப் பற்றாக்குறை அகலும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைப்படும் போதெல்லாம் பணவசதி கிடைக்கும். எதிரிகள் புறமுதுகு காட்டுவர்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

    குருவின் 9ம் பார்வை சமுதாய அங்கீகாரம் பற்றிக் கூறக் கூடிய 7ம்மிடத்தில் பதிகிறது. கடக ராசியினர் அஷ்டமச் சனி முடியும் வரை திருமணம், கூட்டுத் தொழில், நண்பர்கள் போன்ற விசயங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது. பல சாதகமான சூழல் இருந்தாலும் சில தடை தாமதங்களும் உண்டு. மனக் குழப்பம், தடுமாற்றம் உடல் நலக் குறைவு இருந்தாலும் இந்த குருப்பெயர்ச்சி உங்கள் தேவைகளை நிறைவு செய்யும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள்.

    திருமண முறிவு ஏற்பட்டோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் பிரிந்து வாழும் கணவன்-மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வர்கள். மனக்கசப்பு மாறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நண்பர்களுடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பணிகளை விரைந்து முடிப்பதில் வேகம், விவேகம் இருக்கும். புத்திர பாக்கியத்திற்கு காத்திருப்போருக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு. குழந்தைகள் வழியில் ஆதாயம் , சுப காரியமும் உண்டு. பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

    குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024- 13.6.2024 வரை):

    கடக ராசிக்கு தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதியான சூரியனின் தட்சத்திரத்தில் குரு பகவான சஞ்சரிக்கும் காலத்தில் ஐந்திற்கும், பத்திற்கும் அல்லாடிய நிலை மாறும். இது வரை கண்டிராத வகையில் நல்ல பொருளாதார முன்னேற்றம் கூடும். பணவரவு அதிகரிக்கும். நன்றாக சிந்தித்து பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக அக்கறை கொள்வீர்கள். வாக்கு வன்மை கூடும். பேச்சால் குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்துவீர்கள். கடுமையான வார்த்தைகள் பிரயோகம் பண்ணுவதை தவிர்த்தல் நலம்.

    குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை):

    ராசி அதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்நல்ல மாற்றங்கள் ஏற்படும்.நேர்மறை ஆற்றல் பெருகும்.கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியமாக செயல்படுவீர்கள். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். கடந்த ஒரு வருடமாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும்.

    குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்( 21.8.2024 முதல் 8.10.2024 வரை 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

    கடக ராசிக்கு 5, 10ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கும் குருபகவான் பிள்ளை பேறு வழங்குவார். எனவே கர்மம் செய்ய புத்திரம் பிறப்பான். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். அதிர்ஷ்டத்தை விரும்பாதவர் களைக் கூட அதிர்ஷ்டம் விரும்பும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சிறிய உழைப்பில், குறைந்த முயற்சியில் விட்டதை பிடிக்கப் போகிறீர்கள். சிலர் வயோதிகம் காரணமாக பூர்வீகத்தில் வீடு கட்டி செட்டிலாகுவார்கள்.

    குருவின் வக்ர காலம் (கடக ராசிக்கு 5, 10ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

    வக்ரமடையும் காலத்தில் யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பது நல்லது.அரசு ஊழியர்களுக்கு விரும்பாத ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து சிக்னத்தை கடைபிடித்தால் சேமிப்பு உயரும். கடக ராசியின் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் எதையும் பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும்.அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம். வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கக் கூடாது.

    மாணவர்கள்:

    மாணவ-மாணவிகளின் தனித் திறமைகளுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். முயற்சி ஸ்தானம் மற்றும் புத்திக்கூர்மையை வலுப்படுத்தும் 5ம் மிடத்திற்கு பாக்கியாதிபதி குருவின் பார்வை பதிவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிவீர்கள். சுமாராக படித்த மாணவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வார்கள்.

    பெண்கள்:

    குரு பலத்தால் மன வலிமை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள்..கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும். வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டால் கடன் சுமை குறையும். கருப்பை தொடர்பான பிரச்சனைகள் சீராகும்.

     பரிகாரம்:

    லாப குருவின் முழுமையான பலன்களை அனுபவிக்கவும் அஷ்டமச அஷ்டச் சனியின் பாதிப்பு குறையவும் ஸ்ரீ முருகப் பெருமானை வணங்குங்கள்; வாழ்க்கை வளம் பெறும்.

    கடகம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

    தாயன்பு நிறைந்த கடக ராசியினரே இதுவரை ராசிக்கு 9ம்மிடத்தில் நின்று பாக்கிய பலன்களை வழங்கிய குருபகவான் 10ம்மிடமான தொழில் ஸ்தானம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

    தொழில் ஸ்தான குருவின் பலன்கள் :

    கடக ராசிக்கு குருபகவான் 6, 9ம் அதிபதி. ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதி. பாக்கியாதிபதி . ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதி குரு பத்தாமிடம் செல்கிறார். பத்தில் வரும் குரு பகவானுக்கு அஷ்டமத்தில் நிற்கும் சனியின் பார்வை பெறுவது சிறப்பித்துச் சொல்லும் பலன் அல்ல. மேலும் சுமார் ஆறு மாதத்திற்கு குரு பகவான் ராகுவுடன் இணைவதும் சற்று ஏற்ற இறக்கமான பலனைத் தரும். எனினும் குரு பாக்கியாதிபதி என்பதால் எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் புதிய, புதிய எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.

    சிலருக்கு கடன் பெற்று புதிய சொந்தத் தொழில் துவங்கும் ஆர்வம் உதிக்கும். தீர்மானித்த எண்ணங்களை செயல்படுத்தி வெற்றிபெறுவீர்கள். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உருவாகும். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் வேலைப் பளு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் உருவாகும். பிறரை நம்பி எதையும் ஒப்படைக்காமல் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் பத்தாமிட குருவாலும் அஷ்டமச் சனியாலும் ஏற்படும் இன்னல்களி லிருந்து விடுபட முடியும். மேலும் சுய ஜாதகத்தில் சொந்த தொழில் அமைப்பை சொல்லும் இடம் பத்தாம் இடம் பத்தாம் அதிபதி மற்றும் லக்னாதிபதியின் பலம் பெற்று சுப வலுப்பெற்ற தசை புத்தி நடந்தால் தொழில் சார்ந்த விஷயங்கள், உத்தியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை பதிவதால் குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம் பலப்படுகிறது. வாக்கு வன்மை சிறக்கும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலை உடையவர்களுக்கு நல்ல மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் காரணம் காரியம் தெரியாமல் நிலவிய சண்டை, வம்புகள் இருந்த இடம் தெரியாமல் விலகும். பாராமுகமாக இருந்த குடும்ப உறவுகள் மீண்டும் பகை மறந்து பேசுவார்கள்.சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். நேரத்திற்கு சாப்பிட நல்ல அறுசுவை உணவு கிடைக்கும்.வறுமை, பசி, பட்டினி நீங்கும்.அடிப்படை தேவைக்கு திணறியவர்களுக்கு சரளமான பணப்புழக்கம் இருக்கும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் அடங்கும். தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்கும் யோகம் உள்ளது. கண் சம்மந்தமான குறைபாடுகள் வைத்தியத்தில் அறுவை சிகிச்சையில் குணமாகும்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்திற்கு குருவின் ஏழாம் பார்வை பதிவதால் தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். தாய் வழி உறவுகளுடன் இருந்த கருத்து வேற்றுமை மாறும். தாய்வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். வீடு கட்டுதல், விட்டை புதுப்பித்தல், பழைய வீட்டை வாங்கி புதுப்பித்தல் புதிய வாகனம் வாங்குதல் பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்குதல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரும். எந்த விதமான செலவுகளைச் செய்யும் முன்பும் சுய ஜாதக ரீதியான தசா புத்தி அறிந்து செயல்படுவது நல்லது. அஷ்டமச் சனியின் காலம் என்பதால் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி விழுக்காடு கூடுதலாகும்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

    ராசிக்கு ஆறாமிடமான ருண,ரோக, சத்ரு ஸ்தானத்தில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிகிறது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். அறுவை சிகிச்சை வரை சென்ற வியாதிகள் எளிய வைத்தியத்திற்கு கட்டுப்படும். உங்களை பகைத்தவர்கள் முகத்துக்கு நேரே பேசியவர்கள் நட்பு பாராட்டுவார்கள். உங்கள் நல்ல குணத்தை புரிந்து கொள்வார்கள்.அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். கடனுக்காக உங்களை ஓட ஓட விரட்டிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடன்காரர்கள் கால அவகாசம் கொடுப்பார்கள். அல்லது அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சிலருக்கு விபரீத ராஜ யோக அடிப்படையில் கடன் தள்ளுபடியாகும். இதுவரை எந்த கடனும் இல்லாதவர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது தொழில் கடன் என புதியதாக கடன் பெறலாம்.

    அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

    கோட்சாரத்தில் ராசிக்கு நான்கில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிலர் வயோதிகம் மற்றும் சமூக ஆர்வம் காரணமாக சமுதாய தொண்டு நிறுவனங்களில் இணைத்து பணியாற்றலாம். 10,12ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் சேருவது என்ற மனக் குழப்பம் இருக்கும். சுய ஜாதக ரீதியாக பத்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகத்தின் கல்வியை தேர்வு செய்தால் எதிர்காலம் இன்பமாக இருக்கும்.

    பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

    கடகத்திற்கு 4, 11ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பொதுச் சபையில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். தாராளமாக பணப்புழக்கம் இருக்கும், அரசு, அரசியலை சார்ந்த நபருடன் நெருங்கிய தொடர்பு, பலவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை, அடுத்தவர்களின் சொத்தை அனுபவிப்பது, சிலர் அடுத்தவர்க்கு பிணாமியாக இருப்பது, வண்டி, வாகன யோகம் வருமானம் என அனைத்தும் சுகமாக அமையும். ஆரோக்கியத் தொல்லை சீராகும்.

    கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

    கடக ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானமும் பெருகும். குடும்பச் சுமையும் கூடும். உங்கள் முயற்சிக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்ப உறவுகளின் இன்ப, துன்பங்களையும் சேர்ந்து சுமக்க வேண்டிய காலம்.தொழில் உடன்படிக்கைகள் மன நிறைவு கொடுக்கும்.

    குருவின் வக்ர பலன்கள் :

    4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் உழைத்த உழைப்பு வீண் போகாது என்பதை உணர்வீர்கள். மேலதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பூர்வீகத்திற்கு வந்து செல்வதில் நிலவிய தடைகள் விலகும். புத்திர பிராப்தம் சித்திக்கும்.

    பெண்கள் :

    உடலிலும், உள்ளத்திலும் இருந்த தளர்ச்சிகள் நீங்கி புத்துணர்ச்சியும் தோற்றப் பொழிவும் உண்டாகும். குடும்பத்தினர் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அன்பையும், பாசத்தையும் பரிமாறுவீர்கள். பிள்ளைகளாலும், கணவராலும் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். சிதறிய குடும்பம் ஒன்றாகும். மாதவிடாய் கோளாறு சீராகும்.

    மாணவர்கள் :

    நான்காம் இடத்தை குரு பார்ப்பதால் அஷ்டமச் சனியையும் மீறி மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சில மாணவர்கள் கல்வி, விளையாட்டு, அரிய கண்டு பிடிப்புகள் என பல சாதனைகள் புரிவார்கள். பல பட்டயங்களும் பாராட்டுகளும் கிடைக்கும். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் தீய பழக்க வழக்கங்கள் கொண்டவர்களுடன் பழகுவதை தவிர்ப்பது நல்லது.

    உத்தியோகஸ்தர்கள் :

    பணியில் விரும்பத்தகாத இடம் மாற்றம் உண்டாகலாம். அந்த மாற்றம் பலன் தருவதற்கு அதிக கால அவகாசம் எடுக்கலாம். பிறர் செய்த தவறு உங்கள் மேல் விழலாம். உங்களை விட அனுபவம் குறைந்த, பண்பு இல்லாதவர் மேலதிகாரியாக வரலாம். உங்களின் திறமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த சூழ்நிலையில் மனம் கலங்காமல் .வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது.

    ராகு/கேது பெயர்ச்சி :

    அக்டோபர் 30, 2023ல் ராகு 9ம்மிடம் செல்கிறார். கேது 3ம்மிடம் செல்கிறார். இந்த கால கட்டத்தில் உடன் பிறந்தவர்களாலும் தந்தையாலும் பூர்வீகச் சொத்து தொடர்பான மன உளைச்சல் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும். குடியிருப்பை மாற்றம் செய்ய நேரும். தடைபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு பலிதமாகும்.

    பரிகாரம் :

    காலம் ஒரு நாள் மாறும். கவலைகள் யாவும் தீரும். மாற்றம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. குருவின் பார்வை பலம் அஷ்டமச் சனியின் தாக்கத்தைக் குறைக்கும். வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கும் பெருமாள் ஆலயம் சென்று மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை கொண்டு அர்ச்சித்து இனிப்பு நிவேதனம் செய்து வழிபட தொழில் வளர்ச்சி பெறும். பெளர்ணமி அன்று கோ பூஜை செய்து வழிபட சகல விதமான நன்மைகளும் உண்டாகும். இயலாதவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் பசுவிற்கு அகத்திக் கீரை வழங்கி வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    தாய்மை பண்பு நிறைந்த கடக ராசியினரே ராசிக்கு 9ல் குருவும், சனி 7,8ம் இடத்திலும், ராகு/கேதுக்கள் 10/4ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

    ஒன்பதாமிட குருவின் பொது பலன்கள்: ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம். 6,9ம் அதிபதி குரு 9ல் ஆட்சிபலம் பெறுகிறார்.9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு 7, 8ம் அதிபதி சனியின் பார்வை 17.1.2023 வரை உள்ளது. 9ம் இடத்திற்கு சனி, குரு சம்பந்தம் இருப்பதால் பலர் ஜீவனத்திற்காக இடம் பெயரலாம். 6ம் அதிபதி 9ல் ஆட்சி பலம் பெறுவதுடன் சனிப் பார்வை இருப்பதால் சுபமும் அசுபமும் சேர்ந்த பலனே நடக்கும்.

    குருவின் 9ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு உள்ளது. பலர் 6ம்மிடம் என்றால் பொருள் கடன் என்று நினை க்கிறார்கள். பிறவிக்கடன், பொருள் கடன் சேர்ந்தது தான் 6ம் பாவகம். குருவின் 9ம் பார்வைக்கு பாக்கிய பலன்களை அதிகரிக்கும்சக்தி உள்ளது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கர்மாவோடு தொடர்புடையது.

    பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவுகளிடம் ஒன்றை நாம்பெற்றுக் கொள்கிறோம்,அல்லது இழக்கிறோம். இந்த கர்மாவின் தொடர்ச்சியில் சில உறவுகள் கர்ம பந்தமாகிறது. பல உறவுகள் கர்ம வினையாகிறது. அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.சில சமயங்களில் ஏமாற்ற ப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.சிலருக்கு நல்லது செய்கிறோம்.பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.

    இந்த கொடுக்கல் வாங்கலே ருண பந்தம் எனப்படுகிறது. ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல. ஒருவரிடம் இருந்து பெற்ற அன்பும் உதவியும் கூட கடன் தான். ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்பிற்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால் ருண பந்தம் கர்ம வினையாக மாறி ஜனன கால ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாமிடம் பலம் இழக்கும்.

    குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு கிடைக்கும் இந்த காலத்திற்கு பெற்றோர்கள், தாத்தா, பாட்டி வாழ்ந்து கொண்டுஇருந்தால் அவர்களுக்கு தேவையான உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து உங்களது உணர்வுகளை சாந்தமாக வெளிப்படுத்துங்கள், அவர்களின் நல்லாசிகளைப் பெறுங்கள். பெற்றோர்கள் மறித்த பிறகு எவ்வளவு பித்ருக்கள் பூஜை செய்தாலும் கிடைக்காத பாக்கிய பலன் ஒரு நொடியில் கிடைத்துவிடும்.

    பெற்றோர்கள் வாழ்ந்து மறைந்திருந்தால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது குறிப்பாக விடியற்காலை 5 - 6க்குள் மானசீகமாக பேசுங்கள். நல்லாசிக்காக ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். அடுத்த நொடியில் உங்கள் குறைகள் பரிசீலிக்கப்படும். உங்களுக்கு பிறவி கொடுத்தவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பிரதி உபகாரம் தீரும்.

    குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு முறையான பித்ருக்கள் பூஜை செய்து வழிபட பிறவிக்கடன் மற்றும் பொருள் கடன் தீரும். கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்த இயலாத சூழ்நிலையில் இருந்தால் கால அவகாசம் கொடுங்கள். மிரட்டி தற்கொலைக்கு அல்லது தலைமறைவாக காரணமாக இருக்காதீர்கள். உண்மையில் கொடுக்க கூடிய சந்தர்ப்பம் இருந்தும் ஏமாற்றுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

    5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை ராசிக்கு இருப்பதால்இயற்கையிலேயே அழகான நீங்கள் மேலும் அழகு பெறுவீர்கள். உங்களுக்கு என்று தனி கொள்கை வைத்து அதன் அடிப்படையில் செயல் படுவீர்கள். சட்ட திட்டத்திற்கு இணங்கி நடப்பீர்கள். தங்களின் தோற்றம், செயல்பாடுஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். மிடுக்கான தோற்றம் ஏற்படும். தடை பட்டசெயல்கள் வெகு விரைவில்செயலாக்கம் பெறும். உங்களின் செயல்பாடுகள் வியக்க தக்க வகையில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பல்வேறுஅனுகூலமானபலன்கள் நடைபெறும்.உங்களுடைய தகுதி, திறமைஉயரும். சமூதாய அங்கீகாரம்ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும்.

    7ம் பார்வை பலன்கள்: குருவின்7ம் பார்வை 3ம் இடமான சகாய ஸ்தானத்தில் பதிகிறது.அனைத்து விதமான தடைகளும் தகர்ந்து முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். உங்களின் முயற்சிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் முயற்சிகளையும், உழைக்கும் ஆற்றலையும் பல மடங்கு உயர்த்திக் கொண்டு முறையாக பயன்படுத்த ஏற்ற காலம். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் இருந்தகருத்து வேறுபாடு மறையும். உடன் பிறந்தவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடன் நன்றாக இருப்பார்கள். சகோதரர் தொழில் அல்லது உத்தியோகத்திற்கு பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.வேலையில் தொழிலில் இடமாற்றம் உண்டாகும். சிலர் வீடு மாற்றம் செய்யலாம். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு கட்டி குடியேறலாம்.

    9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம்பார்வை 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் பார்வை படும் இடம் பூரிப்பாகும். உங்களைப் பிரிந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு மீண்டும் இல்லம் திரும்புவார்கள். அரசு உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகாதவர்களுக்கு பணி நிரந்தரமாகும். கவுரவப் பதவிகள், விருதுகள் கிடைக்கும். ஆன்மீகத் தொண்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக குருமார்களின் நல்லாசி கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும்.

    வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசித்த கணவன், மனைவி இப்பொழுது தம்பதியராக ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தும் நேரம் வந்துவிட்டது.அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதியஅணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவனுக்கோ, மனைவிக்கோதிடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம்போன்றவைலாட்டரி, பங்குச் சந்தை, உயில் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சகோதர, சகோதரிகள் அல்லது பிள்ளைகளின் திருமணத்தை முன் நின்று விமரிசையாக நடத்துவீர்கள். பாகப் பிரிவினைகள் சுமுகமாகும். எதிர்பாலின நட்பு கிடைக்கும். மகப்பேறு கிடைக்காதவர்களுக்கு குல தெய்வ அருளால் ஆண் குழந்தை பிறக்கும். வீடு, வாகன யோகம் கிட்டும். அவரவர் வயதிற்கும், தசா புக்திக்கும் ஏற்ற அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும்.

    குருவின் வக்ர பலன்:29.7.2022 முதல் 23.11.2022 வரை

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடையும் காலத்தில் உங்கள் ஆற்றலையும் திறமையையும் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். மனதை ஆட்டிப்படைத்த இனம் புரியாத வேதனைகள் மறையும்.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிறருக்கு பொறுப்பு கையெழுத்திட்ட ஜாமீன் தொகை வந்து சேரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். தாய், தந்தை உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவிய இன்னல்கள் அகலும் ராசிக்கு சனி பார்வையும் இருப்பதால் ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

    திருமணம்:குருப் பார்வை ராசிக்கு இருப்பதால் பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். 2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகப் போவதால் 2022க்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது.

    பெண்கள்:குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிலவிய பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். உங்களை புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நல்ல குணம் அறிந்து சரணடைவார்கள்.

    பரிகாரம்: பொதுவாக கர்ம காரகன் சனி கடக ராசிக்கு அஷ்டமாதிபதி என்பதால் இயல்பிலேயே பித்ரு தோஷ தாக்கம் மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 9ல் ஆட்சி பலம் பெற்று இருக்கும் இந்த கால கட்டத்தில் முறையான முன்னோர் வழிபாடு செய்து வர 2023 ஜனவரியில் ஏற்படப் போகும் அஷ்டமச் சனியால் பெரிய பாதிப்பு இருக்காது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×