புதுவையில் தொடர் மழை- விடுதிகளில் முடங்கிய சுற்றுலா பயணிகள்
- புதுவையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்யத்தொடங்கியது.
- ஒரு சில சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு கடற்கரை அழகை கண்டு ரசித்தனர்.
புதுச்சேரி:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது.
அதன் பின் சில நாட்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று காலை புதுவையில் திடீரென மழை பெய்தது. பின்னர் வெயில் அடிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் புதுவையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்யத்தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது.
புதுவையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகமட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் அவர்கள் மணகுள விநாயகர் கோவில், பாண்டி மெரினா, புதுவை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்ப்பார்கள். மேலும் சுண்ணாம்பு ஆறு படகு குழாமில் படகில் சென்று பேரடைஸ் கடற்கரை சுற்றி பார்ப்பார்கள். இன்று தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகள் விடுதியிலேயே முடங்கினார்கள். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
ஒரு சில சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு கடற்கரை அழகை கண்டு ரசித்தனர்.