புதுச்சேரி

4-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்: மின்துறை ஊழியர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை

Published On 2022-10-01 09:21 GMT   |   Update On 2022-10-01 09:21 GMT
  • மின்தடையை சீரமைக்க அரசு பல நடவடிக்கையை எடுத்துள்ளது.
  • பொதுமக்களும் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை அரசின் மின்துறையை தனியார் மயமாக்க, டெண்டர் கோரப்பட்டதை தொடர்ந்து மின் ஊழியர்களின் தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கடந்த 28-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவை, காரைக்கால் மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது. வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அந்தந்த பிராந்தியங்களில் உள்ள தலைமை அலுவலகங்களில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுவையில் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் 30-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்று மாலை அண்ணாசிலை அருகில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் சிவா மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி சுப்பிரமணியன், இந்திய தொழிற்சங்க மைய பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தை முதன்மை ஒருங்கிணைப்பாளர் தேவபொழிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மின் ஊழியர்கள் போராட்டத்தினால் புதுவை நகரம், புறநகர், கிராமப்புற பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடையை சீரமைக்க பணியாளர்கள் இல்லாததால் மணிக்கணக்கில் மின் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் மக்கள் அந்தந்த பகுதிகளில் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அதுபோல சில பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

மின்துறை ஊழியர்கள் போராட்டத்தினால் தொழிற்சாலைகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. பெரிய தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் வைத்து இயக்கி வருகின்றனர். ஆனால் சிறு தொழிற்சாலைகள் மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மின்தடை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் கிடைக்காத தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மின்தடையை போக்கவும், பழுதுகளை சீரமைக்கவும் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக மத்திய பவர்கிரீட்டில் இருந்து 24 அதிகாரிகள் புதுவைக்கு வர உள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் மின்தடையை சீரமைக்கும் பணியாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓய்வுபெற்ற மின் தொழிலாளர்கள், ஊழியர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இவர்களை களத்தில் இறக்குவதன் மூலம் மின்தடையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கவர்னர் தமிழிசை மின்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இதனையும் மீறி மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தால் சட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளவும் அரசு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

மின்துறை ஊழியர்கள், அதிகாரிகள் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது. எனவே, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மின்தடையை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இதனை அரசு வேடிக்கை பார்க்காது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்தடையை சீரமைக்க அரசு பல நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் பொதுமக்களும் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டும்.

டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், ஒரே நாளில் மின்துறை தனியார் மயமாகி விடாது. எனவே, மின்துறை ஊழியர்கள் தங்களுடைய குறைகளை அரசிடம் வைக்கலாம். அவர்களது நலனை பாதுகாக்கும் வகையில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News