புதுச்சேரி

கோட்டக்குப்பம் அருகே அரசு பஸ் கண்ணாடியைஉடைத்த போதை கும்பல்- வாலிபர் கைது

Published On 2023-01-20 10:20 IST   |   Update On 2023-01-20 10:20:00 IST
  • புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு தமிழக அரசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது.
  • கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் முருகன் தகவல் தெரிவித்தார்.

சேதராப்பட்டு:

புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு தமிழக அரசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது.

பஸ்சை புதுவை வாணரபேட்டையைச் சேர்ந்த முருகன் ஓட்டி சென்றார். அப்போது போதையில் பஸ்சில் ஏறிய 4 பேர் கண்டக்டரிடம் சென்னைக்கு செல்வதாக கூறி இருக்கையில் அமர்ந்தனர்.

பஸ் முருகா தியேட்டர் அருகே கொக்கு பார்க் சென்றவுடன் போதை ஆசாமிகள் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் பஸ்சை நிறுத்துங்கள் என கண்டக்டரிடம் கூறியதையடுத்து டிரைவர் முருகன் பஸ்சை நிறுத்தினார்.

பின்னர் அவர்கள் சிறுநீர் கழித்து விட்டு பஸ்சில் ஏறினர். பஸ் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையர்பாளையம் சென்றதும் போதை கும்பலில் இருந்த மற்றொருவர் சிறுநீர் கழிப்பதாக பஸ்சை நிறுத்த சொன்னார்.

அப்போதும் பஸ்சை நிறுத்திய டிரைவர் முருகன், ஒவ்வொரு இடமாக பஸ்சை நிறுத்த முடியாது. சீக்கிரம் சென்று பஸ்சுக்கு வரும்படி கூறினார். அப்போது பஸ் டிரைவர், கண்டக்டரிடம் போதை ஆசாமிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கீழே இறங்கிய அவர்கள் சாலையில் கிடந்த கருக்கலை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடியை நோக்கி வீசினர்.

இதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிர்ச்சி அடைந்த பயணிகள் கீழ இறங்கி கல் வீசி தாக்கியவர்களை பிடிக்க முயன்ற போது 3 பேர் தப்பி ஓடி விட்டனர் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.

உடனே இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் முருகன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் வந்து பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் சென்னை எண்ணூர் சிவகாமி நகரைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 23) என்பதும், நண்பர்களுடன் புதுவை வந்து மது அருந்திவிட்டு சென்னை திரும்பும் பொழுது இவர்கள் தகராறு செய்ததும் பெரிய வந்தது. விஜயகுமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News