புதுவை டாக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி- 2 பேருக்கு சைபர கிரைம் போலீசார் வலைவீச்சு
- ரமணா ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி, 12 ஆயிரம் அமெரிக்க டாலர் இவரது கணக்கில் வரவில்லை.
- ரமணா இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
சமூக வளைதளத்தில் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பணமில்லா பணம் பரிவர்த்தனை என்ற அடிப்படையில் கிரிப்போ கரண்சி, பிட்காயின் என்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளன.
இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவதை, நம்பி, அதில் ஏராளானோர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் இந்த முறையில் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார். தெலங்கானாவை சேர்ந்தவர் தர்மிரெட்டி வெங்கட். இவரது மகன் வெங்கட்ட ரமணா என்ற ரமணா (வயது 36) புதுவை கோலாஸ் நகரில் தங்கி, ஜிப்மரில் எம்.டி. படித்து வருகிறார்.
இவரது இணைய தளத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், பிட்காயின் திட்டத்தில் ரூ.12 ஆயிரம் அமெரிக்க டாலர் கிடைக்கும் என தெரிவித்திருந்தது.
அந்த நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்ட போது, மொகுப், ஹரிஷ்பாபு பாய் ஆகியோர் அவரிடம் பேசி, பணத்தை முதலீடு செய்யுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளளனர்.
உடனே, ரமணா ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி, 12 ஆயிரம் அமெரிக்க டாலர் இவரது கணக்கில் வரவில்லை. உடனே அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமணா இதுகுறித்து புதுவை சைபர்க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மனோஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முதல் கட்ட விசாரணையில், அந்த இருவரும் ரமணா அனுப்பிய பணத்தை, அடுத்தடுத்து 2, 3 வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.மேலும், அவர்கள் பிட்காயினில் போலியான அக்கவுண்ட் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் குஜராத் விரைந்துள்ளனர். புதுவையில் சைபர் கிரைம் தனியாக தொடங்கிய பிறகு போடப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடதக்கது.