மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலூர் வாலிபர் கைது
- கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக கட்டி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
- விக்னேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாகூர்:
புதுவையில் கஞ்சாவை ஒழிக்க வேண்டி ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, முள்ளோடை- குருவிநத்தம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனையிட்டனர். மேலும் அவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்திய போது அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக கட்டி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 23) என்பதும், சென்னையில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் இவர் மீது கடலூர் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு, அடிதடி வழக்கும் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கிருமாம்பாக்கம் போலீசார், விக்னேஷ் கைது செய்து அவரிடமிருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 1.5 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் விக்னேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் ஆகியோர் பாராட்டினர்.