செய்திகள்
திருச்செந்தூர் கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று மாலை ஆடிப்பூர விழா

Published On 2021-08-10 14:09 IST   |   Update On 2021-08-10 14:09:00 IST
ஆடிப்பூரம் திருவிழா தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. ஆனால் திருச்செந்தூர் கோவிலில் ஆடிப்பூரம் விழா இன்று மாலை நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை நாட்களிலும் பக்தர்களின்றி வழக்கமான பூஜைகள் எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்நிலையில் 8 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் ஆடிப்பூரம் திருவிழா தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்செந்தூர் கோவிலில் ஆடிப்பூரம் விழா இன்று மாலை நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மற்ற கால பூஜைகள், பிற்பகல் உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று மாலை மகாமண்டபத்தில் விநாயகர் சன்னதி அருகே உள்ள பார்வதி அம்மன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

பின்னர் வளைகாப்பு நடத்தப்பட்டு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் பார்வதி அம்மன் மகா மண்டபம் சன்னதி செல்கிறார். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இன்று காலை 6 மணி முதல் திருச்செந்தூர் கோவிலில் வழக்கம் போல பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடிப்பூரத்தையொட்டி நாளை அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் கோவிலிலும் அனுமதி வழங்கப்படவில்லை.

நாளை மறுநாள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு வருகிற 23-ந் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்துள்ளது. எனவே அந்த நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

Similar News