செய்திகள்
சபரிமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Published On 2017-02-13 09:32 GMT   |   Update On 2017-02-13 09:32 GMT
தற்போது சபரிமலை கோவிலில் மாசி மாத பூஜைக்காக நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறப்பையொட்டி சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறந்து சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

தற்போது சபரிமலை கோவிலில் மாசி மாத பூஜைக்காக நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்துவைத்தார். நேற்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. கோவில் நடை திறப்பையொட்டி சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அவர்களில் தமிழக பக்தர்கள் அதிகளவில் காணப்பட்டனர். தலையில் இருமுடி கட்டு சுமந்து சரண கோ‌ஷம் முழங்க அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை, உதயாஸ் தமன பூஜை, படி பூஜை போன்றவை தினமும் நடை பெறும். 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

Similar News