உலகம்

ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம்பெண் சுட்டுக்கொலை- லண்டனில் தூதரகம் முற்றுகை

Published On 2022-09-26 08:46 GMT   |   Update On 2022-09-26 08:46 GMT
  • ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.
  • ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கனடா உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். ஆனால் இதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த சில நாட்களுக்குமுன்பு சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி மாஷா அமினி என்ற 22 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.போலீசார் விசாரணையின் போது அவர் திடீரென இறந்தார்.

அவர் மாரடைப்பால் உயிர் இழந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் போலீசார் தாக்கியதால் தான் இறந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. பெண்கள் மற்றும் பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்தனர். போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இது வரை 40 பேர் வரை பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஈரானின் கராஜ் நகரில் போராட்டத்தில் பங்கேற்ற ஹதிஷ் நஜிபி என்ற 20 வயது இளம்பெண் பாதுகாப்பு படை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். போலீசார் துப்பக்கியால் சுட்டத்தில் அவரது முகம், நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனால் ஈரானில் மேலும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கனடா உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News