உலகம்

உக்ரைனில் ஏவுகணை வீச்சு- ரஷியா தாக்குதலால் மின்சாரம், தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்

Published On 2022-12-19 10:34 IST   |   Update On 2022-12-19 10:50:00 IST
  • உக்ரைன் தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
  • மின்சாரத்தை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கிவ்:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களை கடந்து விட்டது. உக்ரைன் மீதான தாக்குதலை தற்போது ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்குள்ள மின் இணைப்புகள் மற்றும் தண்ணீர் இணைப்புகளை குறி வைத்து ரஷியா தாக்குதல் நடத்துகிறது. நேற்று முன்தினம் கிவ் நகர பகுதிகளில் சுமார் 70 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இதனால் பல இடங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சுமார் 6 லட்சம் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது அங்கு கடும் குளிர் நிலவுவதால் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர். தண்ணீர், மின்சாரம் இல்லாமல் முதியவர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறும்போது, தலைநகர் கிவ்வில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகமும் சரிசெய்து தரப்பட்டு உள்ளது. மீதமுள்ள வீடுகளிலும் மின் விநியோகத்தை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

மின்சாரத்தை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Similar News