உலகம்

இன்னும் சில நாட்களில் இலங்கையில் நடக்க போவது என்ன?: பரபரப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை

Published On 2022-07-01 02:27 GMT   |   Update On 2022-07-01 02:27 GMT
  • எரிபொருள் நெருக்கடி, இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
  • அத்தியாவசிய தேவைக்கு கூட எரிபொருள் கிடைப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்பு :

இலங்கையில் எரிபொருளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. ஆனால் அத்தியாவசிய தேவைக்கு கூட எரிபொருள் கிடைப்பது இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்புவில் அதிபர் அலுவலகம் முன்பு ஆசிரியர்களும், மருத்துவ பணியாளர்களும் போராட்டம் நடத்தினர். இலங்கையில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் நாடே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய ஆசிரியர்களும், மருத்துவ ஊழியர்களும் அரசு மீதான கோபத்தை வெளிப்படுத்தினர்.

கொழும்பு இலங்கை தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஜெயந்தா பந்தாரா பேசுகையில், நாட்டின் சுகாதாரத்துறை 90 சதவீதம் முடங்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழக்கும் சோகம் ஏற்படுவதாக மருத்துவமனை பணியாளர் குற்றம் சாட்டினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை அரசால், நாட்டை முடக்கத்தான் முடியும் என ஆதங்கத்தை தெரிவித்தார். அரசு, பொதுப்போக்குவரத்து இயங்கும் என கூறப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பல இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கெனவே உணவுப்பற்றாக்குறை நிலவும் சூழலில், இப்போதைய எரிபொருள் நெருக்கடி, இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Tags:    

Similar News