உலகம்

மீன் தொட்டியில் "மர்ம" ஒலி - ஆய்வில் வெளிவந்த அதிசய உண்மை

Published On 2024-02-27 12:42 IST   |   Update On 2024-02-27 12:52:00 IST
  • அந்த மீன் உள்ள நீர்த்தொட்டியை கடக்கும் போது வினோத சப்தம் கேட்டது
  • இந்த மீனின் உடல் கண்ணாடியை போன்று ஒளி-ஊடுருவும் விசேஷ தன்மையை கொண்டது

ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் (Berlin) நகரில் ஒரு ஆராய்ச்சி கூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வினோத ஒலி கேட்டது.

இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக முனைந்தனர்.

இதில், டேனியோனெல்லா செரிப்ரம் (Danionella cerebrum) எனும் மிகச் சிறிய வகை மீன் ஒன்று அதன் அங்கங்களில் ஒன்றான "ஸ்விம் ப்ளாடர்" (swim bladder) எனும் உறுப்பில் இருந்து சக்திமிக்க சீரான ஒலியை உண்டாக்குவது தெரிய வந்தது.

இந்த மீன் வெளிப்படுத்தும் ஒலியின் அளவு மீன் தொட்டியின் நீர் நிலைகளில் 140 டெசிபெல் (decibel) என பதிவாகியுள்ளது.

இது ஒரு துப்பாக்கி சூட்டின் ஒலிக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.


12 மில்லிமீட்டர் நீளம் மட்டுமே உள்ள இந்த டெனியோனெல்லா மீன் எழுப்பும் ஒலிதான் உலகின் அனைத்து வகை மீன் இனத்திலும் எழுப்பப்படும் அதிகமான ஒலியாகும்.

"டிரம்மிங்" (drumming) எனப்படும் இத்தகைய ஒலியானது ஒரு வகையான செய்தி பரிமாற்றம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

டெனியோனெல்லா மீன்களின் உடல் கண்ணாடி போன்று ஒளி-ஊடுருவும்தன்மை (transparent) கொண்டதால் அவை உயிருடன் இயங்கும் போதே ஆராய்ச்சி செய்வது எளிதாக இருந்தது.

இந்த ஆராய்ச்சியின் போதுதான் டெனியோனெல்லா இருந்த மீன் தொட்டியை கடந்து சென்றவர்கள் அது எழுப்பும் ஒலியை கேட்க முடிந்தது.

மிகச் சிறிய வகை மீன் மிக அதிக ஒலியை எழுப்பும் வினோதம், ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி கடல்வாழ் உயிரின ஆர்வலர்களுக்கும் சுவாரஸ்யமான செய்தியாக உள்ளது.

இது குறித்து மேலும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News