உலகம்

கடலில் இறங்கிய விமானத்தால் அமெரிக்காவில் பரபரப்பு

Published On 2023-11-22 08:29 GMT   |   Update On 2023-11-22 08:29 GMT
  • விபத்திற்குள்ளான விமானத்தில் 9 பேர் பயணம் செய்தனர்
  • இந்த விமானம் சுமார் ரூ.2300 கோடி மதிப்புடையது

மேற்கு அமெரிக்காவில் உள்ள தீவுகள் நிறைந்த மாநிலம், ஹவாய். இதன் தலைநகரம் ஹோனோலூலு.

இங்குள்ள ஒவாஹு (Oahu) தீவுக்கு அருகே கெனோஹே (Kaneohe Bay) கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் விமான படைக்கு சொந்தமான விமான தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்திற்கு வாஷிங்டன் மாநில விட்பி தீவில் இருந்து 9 பயணிகளுடன் போயிங் போஸிடான் 8-ஏ (Boeing Poseidon 8-A) ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று சென்றது.

விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட போது அது எதிர்பாராதவிதமாக ஓடுகளத்தை தாண்டி வேகமாக சென்று, பிறகு கடல்நீரில் இறங்கியது.


அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி கடலில் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பினர்.

கருமேகங்கள் மற்றும் மழையினால் ஓடுதளம் விமானிக்கு தெளிவாக தெரியவில்லை என்றும் இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த விமானத்தில் இருந்து எரிபொருள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ஏதும் கடல் நீரில் கலந்து விடாமல் தடுக்கும் விதமாக கடல் நீரில் பலமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராணுவ உளவு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானம் சுமார் ரூ.2300 கோடி ($275 மில்லியன்) மதிப்புடையது.


Tags:    

Similar News