இந்தியா மீது ஏவுகணை - டிரோன் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை.. பாகிஸ்தான் மறுப்பு
- ஜம்மு மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டன.
- இந்தியாவுடன் பாகிஸ்தானின் மோதல் விரிவடையும் தெளிவான சாத்தியக்கூறு உள்ளது.
இந்தியாவின் எல்லை பகுதிகளான ஜம்மு மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ராணுவ தளங்களையும், பஞ்சாபில் உள்ள பதான்கோட்டையும் பாகிஸ்தான் நேற்று இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியது.மேலும் இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் துணிக்கப்பட்டது. இந்திய ராணுவம் பெரும்பாலான பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன்களை வெற்றிகரமாக அழித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதான்கோட், ஜெய்சால்மர் மற்றும் ஸ்ரீநகர் மீது பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் பரப்பும் ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது .
இந்த கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டவை மற்றும் பாகிஸ்தானை அவதூறு செய்வதை நோக்கமாகக் கொண்ட பொறுப்பற்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். நம்பகமான விசாரணை இல்லாமல் பாகிஸ்தான் மீது சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை இந்தியா மீண்டும் மீண்டும் சுமத்துகிறது" என்று வெளியுறவு அலுவலகம் குற்றம் சாட்டியது.
இதற்கிடையே தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் நடைபெறும் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பொறுப்பல்ல என்று என்று கவாஜா ஆசிப் தெரிவித்தார். "நாங்கள் தாக்கிவிட்டு, பின்னர் அதை மறுக்க மாட்டோம்," என்ற ஆசிப், பாகிஸ்தான் தாக்க முடிவு செய்யும்போது அது உலகம் முழுவதும் அறியப்படும் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.
இருப்பினும், இந்தியாவுடன் பாகிஸ்தானின் மோதல் விரிவடையும் தெளிவான சாத்தியக்கூறு இருப்பதாக ஆசிப் எச்சரித்தார்.