உலகம்
null

இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர்: தாமதமான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு

Published On 2024-01-21 04:33 GMT   |   Update On 2024-01-21 04:53 GMT
  • மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவியேற்றார்.
  • சீன ஆதரவாளராக கருதப்படும் அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

மாலே:

மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவியேற்றார். சீன ஆதரவாளராக கருதப்படும் அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருகிறார்.

மாலத்தீவில் உள்ள இந்திய படைவீரர்கள் 88 பேரை மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெறும்படி இந்தியாவுக்கு மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீன பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மாலத்தீவுக்கு டிரோனியர் ரக விமானத்தையும் இந்தியா வழங்கியது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மாலத்தீவில் உயிரிழந்துள்ளான்.

மாலத்தீவின் கபி அலிப் விலிங்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டு இருந்தான். சிறுவனுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டதால் உடனடி மேல் சிகிச்சை தேவைப்பட்டது. தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

சிறுவனை அழைத்துச் செல்ல இந்தியா வழங்கிய டிரோனியர் விமானத்தைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.

இதனால் 16 மணி நேரத்திற்கு பின் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக மாலத்தீவு உள்ளூர் ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறும்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை உரிய நேரத்தில் தலைநகர் மாலேவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை, தாமதமான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்து விட்டான் என தெரிவித்தார்.

Tags:    

Similar News