உலகம்

12 வழக்கில் ஜாமின் கேட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தை நாடிய இம்ரான் கான்

Published On 2024-07-30 21:46 IST   |   Update On 2024-07-30 21:46:00 IST
  • கடந்த வருடம் மே 9-ந்தேதி இம்ரான் கான் கட்சி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது வன்முறை வெடித்தது.
  • தனது கட்சி ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். 71 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் (PTI-Pakistan Tehreek-e-Insaf) கட்சியை தொடங்கி பிரதமரானார். பின்னர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

இவர் மீது பயங்கரவாதம் தொடர்பான 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஜாமின் வழங்கும்படி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

கடந்த வாரம், லாகூர் உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளில் நீதிமன்ற காவல் வழங்குவதற்கான பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்தது. இம்ரான் கான் வன்முறைப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கவில்லை என்றால் அவருக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டது.

கடந்த ஜூலை 14-ந்தேதி இது தொடர்பான வழக்குகளில் (லாகூரில் பதியப்பட்ட) பஞ்சாப் போலீசார் இம்ரான் கானை கைது செய்தனர். ராணுவ அதிகாரி வீடு மீது தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இம்ரான் கான் முன்ஜாமின் கேட்ட நிலையில் நிதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.

தன் மீதான ஒரே குற்றச்சாட்டு ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதாக கூறப்படுவது மட்டும்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2023 மே 9-ந்தேதி நான் என்ஏபி (National Accountability Court) காவலில் இருந்தேன். வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த அற்பமான எஃப்.ஐ.ஆரில் என்னைச் சிக்க வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டு மே 9-ந்தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது நாடு தழுவிய போராட்டத்தின்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜெயிலில் இருக்கும் இம்ரான் கான் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து வருகிறார்.

ராவல்பிண்டியில் உள்ள உயர்பாதுகாப்பு அடியாலா ஜெயலில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி புஷ்ரா பிபியும் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் பதியப்பட்ட தோஷாகானா ஊழல் வழக்கில் கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ந்தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளில் ஜாமின் கிடைத்த போதிலும் ஜெயிலில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் உள்ளார்.

Tags:    

Similar News