உலகம்

வங்காளதேசத்தில் இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி

Published On 2023-04-07 22:31 GMT   |   Update On 2023-04-08 02:50 GMT
  • சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 175 குடும்பங்கள் ரோவாங்சாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
  • துப்பாக்கி சூடு எதிரொலியால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தஞ்சமடைந்தனர்.

வங்காளதேசம், டாக்கா பந்தர்பானில் உள்ள ரோவாங்க்சாரி உபாசிலாவில் நேற்று இரவு இரு ஆயுத பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி (ஜனநாயக) மற்றும் குகி- சின் தேசிய முன்னணியின் ராணுவப் பிரிவான குக்கி- சின் தேசிய ராணுவம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து குண்டுகள் துளைத்த உடல்கள் பந்தர்பன் ஜிலா சதார் மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன என்றும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ரோவாங்ச்சாரி காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி அப்துல் மன்னன் கூறினார்.

வியாழன் மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 175 குடும்பங்கள் ரோவாங்சாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூடு எதிரொலியால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி பலர் அருகிலுள்ள கல்வி நிறுவனங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News