செய்திகள்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அருகே கார் குண்டு வெடிப்பு - 6 வீரர்கள் பலி

Published On 2021-01-08 05:07 IST   |   Update On 2021-01-08 05:07:00 IST
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கத்தார் தலைநகர் தோஹாவில் 3 மாதங்களுக்கு மேலாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

குறிப்பாக அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் முன்பைவிட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்துக்கு அருகில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்க செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பல வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையில் தெற்கு மாகாணமான ஹெல்மண்டில் உள்ள லஷ்கர் கா என்ற நகரில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் பெண்கள் சிறுவர்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த 2 தாக்குதல்களுக்கும் உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Similar News