செய்திகள்

இலங்கையில் பதற்றத்தை தணிக்க 4 நகரங்களில் ஊரடங்கு சட்டம்

Published On 2019-05-13 11:32 GMT   |   Update On 2019-05-13 13:23 GMT
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் இன்று வெடித்த மோதலை தொடர்ந்து 4 நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில் நேற்று கலவரம் வெடித்ததால் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.



அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் தடுக்கவும் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவையற்ற வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைத்தளங்களும் முடக்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஹெட்டிபொல பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் மீண்டும் மோதல் வெடித்தது.

இதைதொடர்ந்து, குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் போலீசாரின் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் நாளை (14-ம் தேதி) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News