செய்திகள்

கூட்டணி அரசில் குழப்பம்: இஸ்ரேல் தேர்தல் முன்கூட்டியே நடக்காது - பிரதமர் அறிவிப்பு

Published On 2018-11-19 21:49 GMT   |   Update On 2018-11-19 21:49 GMT
கூட்டணி அரசில் நிலவி வரும் அசாதாரணமான சூழலை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக நேட்டன்யாஹூ தெரிவித்தார். #IsraeliPrimeMinister #BenjaminNetanyahu
ஜெருசலேம்:

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பிராந்தியமான காஸாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்டகாலமாக போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில் எகிப்து மத்தியஸ்தம் செய்ததன் விளைவாக ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு முன்வந்தது. 2 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாஹூ தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.

இந்த போர் நிறுத்த முடிவு இஸ்ரேலின் வலதுசாரி கூட்டணி அரசில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ராணுவ மந்திரி அவிக்டோர் லீபர்மென் தனது பதவியை ராஜினாமா செய்தார். மந்திரி சபையின் இந்த நடவடிக்கை ‘பயங்கரவாதத்திடம் சரணடைவது’ என்று அவர் சாடினார். ராணுவ மந்திரியின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் தீவிரமடைந்ததையடுத்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என மந்திரிகள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இது பிரதமர் நேட்டன்யாஹூவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் நேட்டன்யாஹூ தொலைக்காட்சி நேரலையில் தோன்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூட்டணி அரசு பிளவுபடுவதை தவிர்க்கும் விதமாக ராணுவ மந்திரி பொறுப்பை தான் ஏற்பதாக அறிவித்தார். அவர் ஏற்கனவே வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பையும் கூடுதலாக வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே தேர்தல் நடத்துவது பற்றி பேசிய அவர், “இப்போது நிலவும் பாதுகாப்பற்ற மற்றும் இக்கட்டான சூழலில் ஆட்சியை கவிழ்ப்பது சிக்கலாகும். எனவே தேர்தல் முன்கூட்டியே நடக்காது. அப்படி செய்தால் அது பொறுப்பற்ற செயல் ஆகும்” என கூறினார்.

மேலும், கூட்டணி அரசில் நிலவி வரும் அசாதாரணமான சூழலை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக நேட்டன்யாஹூ தெரிவித்தார்.
Tags:    

Similar News