செய்திகள்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு- மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார்

Published On 2018-09-20 05:50 GMT   |   Update On 2018-09-20 05:50 GMT
ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன்மூலம், அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். #JapanPM #ShinzoAbe
டோக்கியோ:

ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே (வயது 63) கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். இதற்கு முன்னதாக, 2009-10 ஆண்டில் அவர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது அவர் சார்ந்த ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது.

இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் பிரதமராக முடிவு செய்த அபே, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதற்கான வேலைகளை தொடங்கினார். இந்நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அபே மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஷிகேரு இஷிபா களமிறங்கினார்.


தேர்தல் முடிவில், ஷின்சோ அபே வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக கட்சி எம்பிக்கள், உறுப்பினர்கள் என மொத்தம் 553 பேர் வாக்களித்தனர். ஷிகேரு இஷிபா 254 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் ஷின்சோ அபே மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியில் நீடிப்பார். இதற்காக அந்நாட்டு அரசியல் சாசனத்தை திருத்தம் செய்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இதன்மூலம் நீண்டகாலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையை ஷின்சோ அபே பெறுவார். இதற்கு முன்பு டாரோ கத்சுரா 1901 முதல் 1913 வரை மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #JapanPM #ShinzoAbe
Tags:    

Similar News