செய்திகள்

முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் தொடங்கும்

Published On 2018-08-10 12:32 GMT   |   Update On 2018-08-10 12:32 GMT
முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது பதியப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #NajibRazak
கோலாலம்பூர்:

மலேசியா பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தற்போதய பிரதமர் மகாதீர் முகமதுவிடம் தோல்வியடைந்தார். தேர்தலின் போதே நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதைத்தொடர்ந்து, நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் நடத்தினர். அதில், பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.  

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள்,  567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும்.

இதன் காரணமாக, நஜீப் ரசாக் மீது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி மற்றும் பண மோசடி உள்பட 7 வழக்குகள் பதியப்பட்டு அவர் கடந்த ஜூலை மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், நஜீப் ரசாக் மீது பதியப்பட்ட ஊழல் வழக்குகள் மீதான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி முதல் நடபெறும் என நீதிபதி முகமது நஸ்லான் முகமது கசாலி இன்று அறிவித்துள்ளார்.

இதில், நஜிப் ரசாக் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு ஆண்டு கணக்கில் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #NajibRazak
Tags:    

Similar News