செய்திகள்

கிரீஸில் ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி

Published On 2018-07-23 23:38 GMT   |   Update On 2018-07-23 23:38 GMT
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டு தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏதென்ஸ் :

கிரீஸ் தலைநகர் ஏதென்சின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதில் திடீர் காட்டு தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரியும் காட்டு தீ மரங்கள் இருக்கும் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.

இதனால், விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.

வனப்பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தில் அவ்வழியாக கார்களில் சென்ற பயணிகள் பலர் சிக்கினர். இதில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 56-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான தீக்காயம் அடைந்திருப்பதாகவும் கிரீஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை காரணமாக மேற்கு ஏதென்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயை அனைக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் ஐரோப்பிய நாடுகளின் உதவியை கிரீஸ் அரசு நாடியுள்ளது.
Tags:    

Similar News