செய்திகள்

ராக்கெட் வேக இண்டர்நெட் வழங்கும் ஜியோஃபைபர் - விரைவில் வெளியீடு

Published On 2018-02-13 13:04 IST   |   Update On 2018-02-13 13:03:00 IST
ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோஃபைபர் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை:

இந்தியாவில் மலிவு விலை பிராட்பேண்ட் சேவையை வழங்கும் நோக்கில் ரிலையன்ஸ் ஜியோஃபைபர் சேவைகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவு பல்வேறு போட்டி நிறுவனங்களின் விலையை முற்றிலும் மாற்றியமைத்து அவற்றை பெருமளவு குறைக்க வைத்தது. 

அந்த வகையில் டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேண்ட் பிரிவிலும் விரைவில் கால்பதிக்க ஜியோ திட்டமிட்டு பணியாற்றி வருவதாக தகவல் வெளியானது. ஜியோஃபைபர் அதிவேக பிராட்பேண்ட் திட்டங்கள் பட்ஜெட் விலையில் நொடிக்கு 1 ஜி.பி. (1 Gbps) வேகத்தில் இண்டர்நெட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதன் வெளியீடு குறித்து எவ்வித தகவல் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் ஜியோஃபைபர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்தியாவில் ஜியோஃபைபர் சேவை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோஃபைபர் சேவைகள் இந்தியாவின் பத்து நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட இடங்களில் ஜியோஃபைபர் வழங்கப்படுகிறது.



ஜியோஃபைபர் பிரீவியூ திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தற்சமயம் ஒவ்வொரு மாதமும் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஜியோஃபைபர் திட்டங்கள் முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படலாம் என கூறப்பட்டாலும், இவை மொபைல் சேவைகளை போன்று நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு ஜியோஃபைபர் அறிமுகம் செய்யப்படும் வரை, இலவச பிரீவியூ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஜியோ முடிவு செய்திருக்கிறது.

அறிமுக சலுகை நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.500க்கு 600 ஜிபி டேட்டாவும், ரூ.2000க்கு 1000 ஜிபி டேட்டா நொடிக்கு 100 எம்.பி. (100 Mbps) வேகத்தில் வழங்க இருக்கிறது. இந்த திட்டங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களை சார்ந்தது என்பதால், இம்முறை விலை பட்டியல் மாற்றப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இந்தியாவில் ரிலைன்ஸ் ஜியோ அறிமுகமானது முதல் மற்ற நிறுவனங்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில், ஜியோஃபைபர் வெளியீட்டை தொடர்ந்து பிராட்பேண்ட் சேவைகளின் விலையும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News