செய்திகள்

ஐபேட் ப்ரோ 2018 மாடல்களில் ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்படலாம் என தகவல்

Published On 2017-10-10 15:06 IST   |   Update On 2017-10-10 15:06:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ மாடல்களில் ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்படலாம் என பிரபல ஐபோன் வல்லுநரான மிங்-சி கியோ தெரிவித்துள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ:

ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டில் வெளியிட இருக்கும் ஐபேட் ப்ரோ மாடல்களில் ட்ரூ டெப்த் கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி மூலம் அன்லாக் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கே.ஜி.ஐ. வல்லுநரான மிங்-சி கியோ தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பங்கள் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் X சாதனத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஐபேட் ப்ரோ மாடல்களில் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்படலாம் என முதலீட்டாளர்களுடனான விவாதத்தில் மிங்-சி கியோ தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் டேப்லெட் சாதனங்கள் என்பதால் ட்ரூ டெப்த் கேமராக்கள் ஐபேட் ப்ரோ சாதனங்களில் மட்டும் வழங்கப்படலாம் என தெரிவித்தார்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தின் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் புதிய ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்குவதோடு, டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் அம்சங்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக கியோ தெரிவித்துள்ளார்.

எனினும் ஆப்பிள் போன்று துல்லியமான அம்சங்களை வழங்க ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 2.5 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ட்ரூ டெப்த் தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியளிக்கும்.

இந்தியாவில் ஐபோன் X விற்பனை நவம்பர் 3-ம் தேதி துவங்க இருக்கும் நிலையில், புதிய ஐபேட் ப்ரோ சார்ந்த தகவல்கள் மர்மமாகவே உள்ளது. எனினும் ஐபேட் ப்ரோ சாதனங்கள் 2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News