செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு
- மொத்த கொள்ளளவான 3.64 டிஎம்சியில் தற்போது 3.25 டிஎம்சியும் நீர் இருப்பு உள்ளது.
- நீர் வெளியேற்றம் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் புயலின் நகர்வினை பொறுத்து அதிகரிக்கப்படும்.
சென்னை:
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 2 மணியளவில் 2,000 கன அடியாக உயர்த்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.
வானிலை மைய முன்னறிவிப்பின் படி வரக்கூடிய மழை அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதை தவிர்க்க படிப்படியாக சென்னையின் தாழ்நிலை பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து 17.11.2025 காலை 8.00 மணி அளவிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டு 20.11.2025 அன்று முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னர் குடிநீர் வழங்கல் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்க கொள்ளளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது.
இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 2164 அடியாகவும், கொள்ளளவு 3025 மில்லியன் கனஅடியாகவும் (82.99%) உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து நண்பகல் 12 மணி நிலவரப்படி 150 கனஅடியாக உள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் தற்பொழுது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்த முன்னறிவிப்புகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 28.11.2025, 29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய நாட்களில் சென்னை குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் பிடிப்பு பகுதியில் மழையின் அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும் முன்னெச்சரிக்கையாக நீர்த்தேக்கங்களின் தற்போதைய கொள்ளளவை குறைக்கும் நடவடிக்கையாக (Pre Empty) ஏரியிலிருந்து 29.11.2025 நண்பகல் 12.00 மணி அளவில் வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இன்று பிற்பகல் 2 மணி அளவில் வினாடிக்கு 2000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நீர் வெளியேற்றம் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் புயலின் நகர்வினை பொறுத்து அதிகரிக்கப்படும்.