தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2024-11-09 10:07 IST   |   Update On 2024-11-09 10:07:00 IST
  • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.59 அடியாக இருந்தது.
  • தற்போது அணையில் 73.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

இதற்கிடையே கடந்த மாதம் 3-வது வாரத்தில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக 96 அடியாக குறைந்த அணையின் நீர்மட்டம் மீண்டும் 107 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்து விட்டது. ஆனாலும் டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்கு ஏற்ப அங்கு மழை பெய்தால் தண்ணீர் குறைத்தும், மழை நின்றால் அதிகரித்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.59 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 9 ஆயிரத்து 466 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 9 ஆயிரத்து 149 கனஅடியாக குறைந்தது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 73.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News