கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சி.பி.சி.ஐ.டி போலீசில் சயான் ஆஜரானார்
- சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கினை தற்போது விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஏற்கனவே ஒரு முறை விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பினர்.
அதனை ஏற்று இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சயான் விசாரணைக்கு ஆஜரானானர். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.