தமிழ்நாடு செய்திகள்

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு- 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published On 2025-09-12 10:26 IST   |   Update On 2025-09-12 10:26:00 IST
  • சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119.00 அடியாகும். தற்போது அணையின் நீர் இருப்பு 113.55 அடியாக உள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று மதியம் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக சாத்தனூர் அணைக்கு வரும் உபரி நீரை அணையின் நீர் மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதம் வெளியேற்றப்பட உள்ளது.

சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கலெக்டர் தர்ப்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருவாய் துறை, நீர் வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பணியாளர்கள் இணைந்து வெள்ள அபாயம் ஏற்படும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News